பீகார் கோர்ட் வளாகத்தில் குண்டுவெடிப்பு: பெண் உட்பட 3 பேர் பலி - 4 பேர் காயம்
பாட்னா: பீகாரில் கோர்ட் வளாகத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் ஒரு பெண் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
பீகார் மாநிலம் அர்ரா மாவட்டத்தில் உள்ள சிவில் கோர்ட் வளாகத்தில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அளித்த தகவலின் படி, நடுத்தர வயதுடைய பெண் ஒருவர் கோர்ட் வளாகத்தில் நுழைந்ததாகவும், அவரது பையிலிருந்த குண்டு வெடித்ததாகவும் கூறப்படுகிறது.
குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாகக் கூறப்படும் பெண்ணும், இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். எனவே, அவர் தொடர்பான விவரங்களைப் போலீசார் சேகரித்து வருகின்றனர். அப்பெண் தவிர ஒரு போலீஸ்காரர் உட்பட மேலும் இருவர் உயிரிழந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல், இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் சிக்கி படுகாயமடைந்த 4 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.