2001–ல் யஷ்வந்த் சின்ஹா, 2008-ல் பாஜக, காங். ரூ40 கோடி லஞ்ச பேரம்.. பப்பு யாதவ் புத்தகத்தால் சர்ச்சை
டெல்லி: 2001 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணியில் சேர தமது கட்சி எம்.பிக்களுக்கு யஷ்வந்த் சின்ஹா லஞ்சம் கொடுத்ததாக பீகாரின் அரசியல்வாதி பப்பு யாதவ் சுயசரிதையில் எழுதி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் 2008ஆம் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ரூ40 கோடி லஞ்சம் தர பாஜக, காங்கிரஸ் கட்சிகள் முன்வந்ததாகவும் அவர் கூறியிருக்கிறார்.
பீகார் சர்ச்சை அரசியல்வாதிகளில் முக்கியமானவர் ராஜேஷ் ரஞ்சன் என்ற பப்பு யாதவ். இவர் பீகாரில் இருந்து சமாஜ்வாடி, லோக்ஜனசக்தி, ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சிகள் சார்பிலும், ஒரு முறை சுயேச்சையாகவும் போட்டியிட்டு லோக்சபா உறுப்பினர் பதவி வகித்தவர். ராஷ்டிரீய ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாத்தின் நெருங்கிய உறவினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் அஜித் சர்கார் கொலை வழக்கில் விசாரணை நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர். பின்னர் உயர்நீதிமன்றம் அவரை விடுவித்தது.
பல்வேறு கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய பப்பு யாதவ், தமது வாழ்க்கை வரலாறை ‘ட்ரோக்கால் கா பதிக்' என்ற பெயரில் புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், கடந்த 2001-ம் ஆண்டு பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சேருவதற்கு தனது இந்திய கூட்டாட்சி ஜனநாயக கட்சி எம்.பி.க்களுக்கு, அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்ஹா லஞ்சம் தந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அந்த புத்தகத்தில், எம்.பி.க்கள் ஆதரவு தருவதற்காக பேரம் பேசப்பட்டது. அன்வருல் ஹக் ஒரு காரையும், ரூ.1 கோடியையும் பெற்றார். நாகமணி உடனடியாக ரூ.1 கோடி பெற்றார். அவருக்கு இணை அமைச்சர் பதவியும் தருவதாக வாக்குறுதி தரப்பட்டது. இதைச் செய்தது அப்போதைய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்கா. பி.சி.தாமசுக்கு இணை அமைச்சர் பதவி கிடைத்தது. அன்வருல் ஹக், சுக்தேவ் பஸ்வான் ஆகியோர் பணம் எடுத்துக்கொண்டனர். நாகமணிக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. அவருக்கும் பணம் தரப்பட்டது. மற்றவர்கள் பணம் எடுத்துக்கொள்ளவில்லை.
எனக்கு யஷ்வந்த் சின்காவுடன் குடும்ப உறவு இருந்தது என்று கூறியிருக்கிறார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
2008-ம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, தம்மை காங்கிரஸ் கூட்டணி சார்பிலும், பாஜக கூட்டணி தரப்பிலும் நாடியதாகவும், இரு கட்சிகளுமே தமது கட்சி எம்.பி.க்களுக்கு தலா ரூ.40 கோடி தர முன்வந்ததாகவும் பப்பு யாதவ் கூறி உள்ளார்.
ஆனால் இதை யஷ்வந்த் சின்ஹா மறுத்துள்ளார். அவர் இது குறித்து கூறுகையில், மிகவும் கேவலமானது குற்றச்சாட்டு. இதை நான் மறுக்கிறேன். இது கருத்து கூறத்தகுந்தது அல்ல என்றார்.