திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது ஆசிட் வீசிய இளம்பெண்... தலைமறைவு!
லக்னோ: உத்திரப்பிரதேசத்டில் காதலித்து ஏமாற்றிய இளைஞர் மீது ஆசிட் ஊற்றிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
உத்தரப்பிரதேசத்தின் பால்லியா மாவட்டத்தில் உள்ள ஜாம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் பால்(20). இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்தனர். சமீபகாலமாக தனது காதலியைச் சந்திப்பதைத் தவிர்த்து வந்துள்ளார் ராஜ்குமார்.
இந்நிலையில், நேற்றிரவு ராஜ்குமாரை நேரில் சந்திக்க அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார் அவரது காதலி. அப்போது தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி அவர் வற்புறுத்தியுள்ளார்.
ஆனால், திருமணத்திற்கு ராஜ்குமார் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்பெண், மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து ராஜ்குமாரின் மீது ஊற்றினார். ராஜ்குமாரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தார், அவரை மீட்டு வாரணாசி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருக்கும் அந்த இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.