சீனப் பொருட்களை புறக்கணியுங்கள் சிலிகுரி மக்கள் வேண்டுகோள் !
சிலிகுரி: இந்திய எல்லை பகுதிக்குள் சீனா அத்துமீறி வருவதை கண்டித்து அந்நாட்டு பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என சிலிகுரி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியா, பூடான், சீனா ஆக்கிரமித்துள்ள திபெத் சந்திக்கும் முச்சந்திப்பில் உள்ளது பூடானின் டோக்லா பீடபூமி. இந்தப் பகுதியில் சீனா சாலைப்பணிகளை தொடங்கியது. அதை இந்தியாவும், பூடானும் கடுமையாக எதிர்த்தன. மேலும், சிக்கிம் எல்லையில் இந்தியா ராணுவ வீரர்களைக் குவித்துள்ளது. பதிலுக்கு சீனாவும் ராணுவத்தைக் குவித்துள்ளது.
இதனால் இரு நாடுகளுக்கு இடையே மோதல் சூழல் உருவாகியுள்ளது. எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் என பெரும் பீதி நிலவி வருகிறது. டோக்லாவை ஒட்டியுள்ள எல்லையில் நீண்ட தூரத்திற்கு இரு நாட்டு படைகளும் குவிக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் முடிவுக்கு வரும் வரை தற்போதுள்ள நிலைப்பாட்டையே தொடர இந்தியா முடிவு செய்துள்ளதாக ராணுவ அதிகாரிகள் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே சீனாவின் அத்துமீறலை கண்டிக்கும் வகையில் சீனாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை புறக்கணியுங்கள் என்ற பிரசாரம் இந்தியாவில், சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.
இந்நிலையில் சீனாவின் அத்துமீறலை கண்டித்து மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் சீனப் பொருட்களை புறக்கணிக்க கோரி பேரணி நடைபெற்றது. பேரணியில் கலந்துகொண்டவர்கள் சீனப் பொருட்களை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மேலும் சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் மூலம் சீனாவின் பொருளாதார வளர்ச்சி பின்னடைவை சந்திக்க நாம் காரணமாகும் நிலை உருவாகும் என்றும் அவர்கள் கூறினர்.