பெங்களூரு: சுகோய் போர் விமானத்தில் இருந்து இந்த ஆண்டு இறுதிக்குள் சூப்பர்சோனிக் பிரமோஸ் ஏவுகணை சோதனை நடத்தப்பட உள்ளது.இது தொடர்பாக நமது ஒன் இந்தியா தளத்துக்கு பிரமோஸ் ஏவுகணை செயல்திட்ட அலுவலர் சுதிர்குமார் மிஸ்ரா கூறியதாவது:ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல் நிறுவனத்திடம் இருந்து மாற்றியமைக்கப்பட்ட சுகோய் விமானம் பிப்ரவரி மாதம் பெறப்பட்டது. தற்போது ஏவுகணையை செலுத்தும் லாஞ்சர்கள் விமானங்களில் பொருத்தப்பட்டு சோதிக்கப்பட்டு வருகிறது.சுமார் 2.5 டன் எடையுள்ள ஏவுகணைகளை இந்த விமானங்கள் தாங்கி செல்லும். இதற்கான சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் சுகோய் போர் விமானத்தில் இருந்து பிரமோஸ் ஏவுகணை சோதனை நடத்தப்படும்.இவ்வாறு சுதிர்குமார் மிஸ்ரா கூறினார்.பெங்களூருவில் நடைபெற்ற ஏரோ இந்தியா-2015 நிகழ்வின் போது பிரமோஸ் ஏவுகணைகளை தாங்கிச் செல்லும் சுகோய் விமானங்கள் இந்திய விமானப் படையிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டுக்குள் சுகோய் போர் விமானத்தில் இருந்து பிரமோஸ் ஏவுகணை சோதனை நடத்தப்படும். இதனைத் தொடர்ந்து ஒன்றிரண்டு சோதனைகள் நடத்தப்பட்டு தயார்நிலைக்கு வைக்கப்படும்.இதனிடையே தற்போதைய சூப்பர்சோனிக் பிரமோஸ் ஏவுகணையின் அடுத்த கட்டமான ஹைப்பர்சோனிக் பிரமோஸ் ஏவுகணைக்கு மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஒன் இந்தியா செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.