ஓங்குதாங்கான ஓங்கோல் மாடுகளின் விந்தணுக்களைக் கேட்டு கெஞ்சி நிற்கும் பிரேசில்!
ஹைதராபாத்: ஓங்கோல் மாடுகளின் விந்தணுக்களைக் கேட்டு ஆந்திர பல்லுயிரி ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளது பிரேசில்.
ஓங்கோல் மாடுகளின் விந்தணுக்களை பிரேசில் கேட்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆந்திராவைச் சேர்ந்த ஓங்கோல் காளை மற்றும் பசுக்கள் உலகப் பிரசித்தி பெற்றவை.
இவ்வகை மாடுகள் பிரகாசம், குண்டூர், அனந்தபூர் ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்றன. இப்போது சுமார் 1 லட்சம் மாடுகள் மட்டுமே இப்பகுதியில் உள்ளன.
அதிக நோய் எதிர்ப்பு சக்தி...
சுமார் 350 முதல் 420 கிலோ எடை வரை உள்ள இவை எப்படிப்பட்ட தட்பவெப்ப சூழலிலும் வாழும் தன்மையுடையவை. அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட இவை மிகவும் பலம் வாய்ந்தவையாகும். இந்த இனத்தில் உள்ள பசு மாடுகள் நாள் ஒன்றுக்கு சுமார் 80 லிட்டர் வரை பால் கறக்கும் திறன் கொண்டவை.
மாட்டுத் தீவனம்...
தினமும் இவ்வகை மாடுகளுக்கு மாட்டுத் தீவனம் உட்பட, குளுக்கோஸ், வாழைப்பழம் போன்றவையும் தீனியாக வழங்கப்படுகிறது. இதனால் இவற்றைப் பராமரிக்க நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.1,000 வரை செலவாகிறது என இப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். பராமரிப்பு செலவு அதிகமாக உள்ளதால், சாதாரண விவசாயிகளால் இதை வளர்க்க இயலவில்லை.
கடும் கிராக்கி...
ஆனால், ஓங்கோல் மாடுகளுக்கு பிரேசிலில் கடும் கிராக்கி நிலவுகிறது. ஏற்கனவே இங்கு 2.5 கோடி ஓங்கோல் மாடுகள் உள்ளன. ஆனபோதும், மேலும் இதன் எண்ணிக்கையை அதிகரிக்க இவ்வகை மாடுகளின் விந்தணுக்களை வாங்க அந்நாடு திட்டமிட்டுள்ளது.
விண்ணப்பம்...
இதனால் தங்கள் நாடுகளில் உற்பத்தி செய்வதற்காக இவ்வகை மாடுகளின் 5000 யூனிட் விந்தணுக்களை வழங்குமாறு ஆந்திர பல்லுயிரி ஆணையத்தில் பிரேசில் விண்ணப்பித்துள்ளது. இன்னும் இதற்கு ஆந்திரா அனுமதி தரவில்லை. இதுகுறித்து தற்போது ஆணையத்தால் நியமிக்கப் பட்ட குழு பரிசீலித்து வருகிறது.
கடத்திச் சென்று...
உண்மையில் பிரேசில் நாடானது, ஓங்கோல் ரக மாடுகளை கடந்த 1960ம் ஆண்டுகளில் சட்டவிரோதமாக இங்கிருந்து கடத்திச் சென்றுதான் தங்களது நாட்டில் ஓங்கோல் மாடுகளை அதிக அளவில் அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
மாட்டிறைச்சிக்காக...
மேலும் இந்த ஓங்கோல் காளை மாடுகளை பின்னர் கறிக்காக வெட்டித் தள்ளுகின்றனர். அந்த இறைச்சியை ஏற்றுமதி செய்தி கொள்ளை லாபமும் பார்க்கின்றனர். கிட்டத்தட்ட 26 நாடுகளுக்கு இந்த மாட்டிறைச்சி ஏற்றுமதியாகிறதாம்.
மாட்டு நோய்...
தென்ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட கடும் மாட்டு நோய் காரணமாக ஆப்பிரிக்க, ஐரோப்பிய மாடுகள் அழிந்து போய் விட்டன. அப்போது அந்த நாடுகளுக்கு ஓங்கோல் மாடுகள்தான் கை கொடுத்தன எனபது முக்கியமானது.
சிக்கல்...
தேசிய பல்லுயிரி சட்டம் அமலுக்கு வந்ததையடுத்து, கடந்த 2000-ம் ஆண்டு முதல் ஓங்கோல் வகை மாடுகளின் விந்தணுக்களை இந்தியாவிலிருந்து வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கலப்பு ஓங்கோல் மாடுகள்...
இந்தியாவில் இருந்து வாங்கும் ஓங்கோல் மாடுகளின் விந்தணுக்கள் மூலம் புதிய கலப்பு ஓங்கோல் மாடுகளை உருவாக்கி அவற்றை மற்ற நாடுகளுக்கு விற்க பிரேசில் திட்டமிடுகிறது. இதன் மூலம் கொள்ளை லாபம் கிடைக்கும் என்பதால், உயர் இனமான பிராம்மன வகை மாடுகளின் விந்தணு ஒரு யூனிட் 5,000 டாலர்களுக்கு வாங்கக் கூட அவர்கள் தயாராக உள்ளனர்.
அழியும் அபாயம்...
ஆனால், இவ்வாறு வெளிநாடுகளில் ஓங்கோல் கலப்பு மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்தால், காலப்போக்கில் கலப்பில்லாத ஓங்கோல் மாடுகள் அழிந்து விடும் என இந்தியா கவலைப்படுகிறது.