இரட்டை இலைக்கு லஞ்சம்: சுகேஷ் மீது மட்டும் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல்- தினகரன் பெயர் இல்லை!
டெல்லி: தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டெல்லி போலீசார் முதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். இதில் புரோக்கர் சுகேஷ் பெயர் மட்டும் இடம்பெற்றுள்ளது. டிடிவி தினகரன், மல்லி ஆகியோரது பெயர்கள் இடம்பெறவில்லை.
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் அவரது நண்பர் மல்லிகார்ஜுனா உட்பட நான்கு பேரை டெல்லி குற்றவியல் போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு 90 நாட்கள் ஆக உள்ள நிலையில் டெல்லி போலீசார் திஸ்ஹசாரி நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இதில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரின் பெயர் மட்டும் இடம்பெற்றுள்ளது.
ஆனால் டிடிவி தினகரனின் பெயர் இடம் பெறவில்லை. வழக்கு விசாரணையை வரும் 17ஆம் தேதிக்கு டெல்லி தீஸ் ஹாசரி நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
இதனிடையே தினகரன் உள்ளிட்டோர் மீதும் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என டெல்லி போலீஸ் ஆணையர் பிரவீன் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.