யு.எஸ்.சிலிருந்து திருமணத்திற்கு வந்த புதுப்பெண் கேரள விமான நிலையத்தில் கடத்தல்- மூவர் கைது
கொழிஞ்சாம்பாறை: அமெரிக்காவில் இருந்து திருமணத்திற்காக கேரள விமான நிலையம் வந்த இளம்பெண் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பட்டனம்திப்பாறையை சேர்ந்த 18 வயது இளம்பெண் குடும்பத்துடன் அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தில் வசித்து வருகிறார். இவருக்கும் சென்னையை சேர்ந்த வாலிபருக்கும் வருகிற 13 ஆம் தேதி திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டுள்ளது. திருமணத்துக்காக இளம்பெண் தனது குடும்பத்தினருடன் விமானம் மூலம் கேரளா திரும்பினர்.
நெடும்பாஞ்சேரி சர்வதேச விமான நிலைம் வந்து இறங்கினர். பின்பு அவர்கள் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தனர். வீடு செல்வதற்காக கால் டாக்சி நிறுத்தும் இடத்துக்கு சென்றனர். திடீரென 3 கார்கள் அங்கு வந்தன. கண் இமைக்கும் நேரத்தில் ஒரு காரை விட்டு இறங்கிய வாலிபர் புதுப்பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் குண்டுக்கட்டாக தூக்கி ஏற்றினார். பின்பு 3 கார்களும் அணிவகுத்து மின்னல் வேகத்தில் சென்றன. நொடிபொழுதில் நடந்து இந்த சம்பவத்தால் மணப்பெண்ணின் பெற்றோர் என்ன செய்வதென்று திகைத்து நின்றனர்.
இது குறித்து அங்கிருந்த போலீசில் புதுப்பெண்ணின் பெற்றோர் புகார் செய்தனர். போலீசார் புதுப்பெண் கடத்தல் குறித்து மற்ற போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் குறிப்பிட்ட கார்களை கண்டு பிடிக்க முடியவில்லை. புதுப்பெண் குடும்பத்துடன் விமானத்தில் பயணம் செய்த சிம்சன் என்ற வாலிபர் பெண்ணை கடத்தியபோது பார்த்ததாகவும், ஒரு காரின் எண் தனக்கு தெரியும் என்று போலீசில் கூறினார். குறிப்பிட்ட கார் எண்ணை வைத்து தேடுதல் வேட்டை நடத்துமாறு போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். இதனையடுத்து 10 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு கார்களை சல்லடைபோட்டு தேடினர்.
இது குறித்து அறிந்த மணப்பெண்ணை கடத்தியவர்கள் பதுங்கினர். கார் எண்ணை ஆர்.டி.ஓ.விடம் கொடுத்து முகவரியை போலீசார் பெற்றனர். போலீசார் தங்களை நெருங்கி விட்டதை அறிந்த கடத்தல்காரர்கள் புதுப்பெண்ணை காரில் இருந்து தள்ளிவிட்டனர். அங்கு தீவிர தேடுதல் பணியில் இருந்த நெடும்பாஞ்சேரி டி.எஸ்.பி. சம்ஸ் தலைமையிலான போலீசார் கடத்தல்காரர்களின் கார்களை மடிக்கிப்பிடித்தனர். நடுரோட்டில் தவித்த புதுப்பெண்ணையும் மீட்டனர். கைது செய்யப்பட்ட 3 கடத்தல்காரர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் சாலக்குடியை சேர்ந்த மார்ட்டின், ஜான் மற்றும்இரிஞாலகுடாவை சேர்ந்த அபின் ஆகியோர் என்பதும், மார்ட்டின் என்பவர்தான் புதுப்பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் தூக்கிப்போட்டு கடத்தினார் என்பதும் தெரியவந்தது. 3 கார்களையும் பறிமுதல் செய்த போலீசார் புதுப்பெண் கடத்தியது குறித்து 3 பேர்களிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.