அஸ்ஸாமில் பாதுகாப்புப் படை தாக்குதலுக்கு பழிவாங்க ஆதிவாசிகளை படுகொலை செய்த போடோ தீவிரவாதிகள்!
குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் தங்களுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை மேற்கொண்டதற்கு பழிவாங்கவே ஆதிவாசிகள் 50 பேரை போடோ தீவிரவாதிகள் படுகொலை செய்ததாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
அஸ்ஸாமில் கோக்ரஜ்கர், சோனித்பூர் ஆகிய இடங்களில் திடீரென ஆயுதங்களுடன் நுழைந்த போடோ தீவிரவாதிகள் அப்பாவி ஆதிவாசிகள் 50 பேரை மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்தனர். நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அஸ்ஸாமில் கடந்த ஒரு மாதகாலமாக போடோ தீவிரவாதிகள் உள்ளிட்ட ஆயுதம் தாங்கிய குழுக்களுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதில் பல தீவிரவாதிகள் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் 3 போடோ தீவிரவாதிகளும் அடங்குவர். இதனால் தீவிரவாதிகள் பதில் தாக்குதல் நடத்தக் கூடும் என்று உளவுத்துறை அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்தன.
இந்த எச்சரிக்கையையும் மீறி போடோ தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இவர்கள் முதலில் முஸ்லிம்கள் வாழும் கிராமத்தின் மீதுதான் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் அங்கு பாதுகாப்பு அதிகமாக இருந்ததால் திடீரென ஆதிவாசிகள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு படுகொலையை அரங்கேற்றியுள்ளனர்.
இது குறித்து ஒன் இந்தியாவிடம் பேசிய அஸ்ஸாம் டிஜிபி ககேன் சர்மா, ஏ.கே.47 ரக ஆயுதங்களுடன் மாலை 6.30 மணியளவில் தீவிரவாதிகள் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர். அருணாசலப்பிரதேசத்தை ஒட்டிய பாபோய் பகுதியில் மிருகத்தனமாக கொலைவெறியாட்டத்தில் தீவிரவாதிகள் ஈடுபட்டிருக்கின்றனர்.
தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு குழந்தைகளும் பெண்களும் தப்பவில்லை என்றார்.