நடுத்தர வர்க்கத்தினர், மாத ஊதியதாரர்களுக்கு பெரிய அளவில் சலுகைகள் தராத பட்ஜெட்
டெல்லி: கார்ப்பரேட் நிறுவனங்கள், விவசாயிகளை மகிழ்வித்திருக்கும் மத்திய பட்ஜெட் நடுத்தர வர்த்தக்கத்தினர் மற்றும் மாத ஊதியதாரர்களுக்கு பெரிய அளவிலான சலுகைகளைக் கொடுக்கவில்லை.
நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறியுள்ளதாவது:
தற்போது வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ2.5 லட்சமாக இருக்கிறது. இதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. அதே நேரத்தில் வேறு சில திட்டங்களில் வரி விலக்குக்கான சில வரம்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
ஆண்டு வருமானம் ரூ.4,44,200 வரை உள்ளவர்களுக்கு வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரியில் போக்குவரத்து படி வரம்பு ரூ.800லிருந்து ரூ.1,600 ஆக உயர்கிறது.
மருத்துவ காப்பீடு வரி சலுகைக்கான வரம்பு ரூ.15,000த்தில் இருந்து ரூ.25,000 அதிகரிப்பு. மூத்த குடிமக்களுக்கு மருத்துவ காப்பீடு வரி சலுகைக்கான வரம்பு ரூ.30,000 ஆகவும், 80 வயதுக்கு மேலான மிகவும் மூத்த குடிமக்களுக்கு மொத்த செலவில் இருந்து ரூ.30,000 கழித்துக் கொள்ளப்படும்.
வருமான வரி விலக்கு பெற தேசிய ஓய்வூதிய திட்ட முதலீட்டுக்கான தொகை ரூ 1 லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சமாக உயர்வு. இதேபோல் பெண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டமான சுகன்யா சம்ரித்தி திட்டத்தில் வட்டிக்கு வரிவிலக்கு போன்றவை நடுத்தர வர்க்கம் மற்றும் மாத ஊதியதாரர்களுக்கு ஆறுதல் தரும் அறிவிப்புகள் எனலாம்.