ரூ.10க்கு ஆசைப்பட்டு ரூ.4 லட்சம் தங்க நகைகளை பறிகொடுத்த ரிடையர்ட் தலைமை ஆசிரியை
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியை தெருவில் கிடந்த சில 10 ரூபாய் நோட்டுகளை எடுக்கச் சென்று ரூ.4 லட்சம் மதிப்புள்ள தங்கை நகைகளை பறிகொடுத்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் விகாராபாத் அரசு உயர் நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர் ஸ்வர்ண ரேகா(58). அவர் தனது அக்கா சந்திய ரேகா(60), சகோதரர் சுதாகர் மற்றும் சந்தியாவின் மகள் ஷ்ரத்தாவுடன் திங்கட்கிழமை காலை ஹைதராபாத் தில்சுக்நகரில் உள்ள கல்வி ஆலோசகர் ஒருவரை சந்திக்க சென்றுள்ளார்.
மற்ற மூவரும் காயத்ரி கல்வி ஆலோசக அலுவலகத்திற்கு சென்றுவிட்டனர். மேனேஜ்மென்ட் கோட்டாவில் மெடிக்கல் சீடி பெறுவது குறித்து விவரம் கேட்க அவர்கள் சென்றுவிட்டனர். அப்போது ரேகா மட்டும் காரில் இருந்துள்ளார். கார் டிரைவர் டீ குடிக்க சென்றுவிட்டார். காரில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை ஒரு பையில் வைத்துள்ளனர். மேலும் காரின் டிக்கியில் ரூ.40 லட்சம் ரொக்கம் இருந்துள்ளது.
இந்நிலையில் தெருவில் சில 10 ரூபாய் நோட்டுகள் கிடந்ததை பார்த்த ரேகா காரில் இருந்து இறங்கி அவற்றை எடுத்துள்ளார். தெருவில் கிடந்த எட்டு 10 ரூபாய் நோட்டுகளை அவர் எடுத்துக் கொண்டு காரில் ஏறினார். அப்போது காரில் இருந்த நகை பையை எடுத்துக் கொண்டு திருடன் ஓடுவதை அவர் பார்த்து கூச்சலிட்டார். கார் டிரைவர் வருவதற்குள் திருடன் ஓடிவிட்டான்.
இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடனை தேடி வருகின்றனர். சந்தியாவின் மகள் ஷ்ரத்தாவுக்கு மெடிக்கல் சீட் வாங்கவே அவர்கள் நகை, பணத்துடன் வந்துள்ளனர். ஆனால் 10 ரூபாய் நோட்டுகளுக்கு ஆசைப்பட்டு ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகை பறிபோய்விட்டது.