காசு மேல காசு வருது... 7வது ஊதிய குழு பரிந்துரை - 34 திருத்தங்களுடன் மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
7வது ஊதிய குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஜூலை 1 முதல் புதிய ஊதிய மாற்றம் அமலாகிறது.
டெல்லி: 34 திருத்தங்களுடன் 7வது ஊதிய கமிஷன் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஜூலை 1 முதல் புதிய ஊதிய முறை அமலாகிறது. இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் உயருகிறது. இந்த ஊதிய திருத்தத்தின அரசுக்கு கூடுதலாக 30,748 கோடி ரூபாய் வருடத்துக்கு அதிகச் செலவாகும் என்று நிதியமைச்சர் கூறியுள்ளார்.
மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் ஊதியம் குறித்த பரிந்துரைகளை, ஏழாவது சம்பள கமிஷன் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பித்திருந்தது. இதன்படி அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்டவை ஏற்கனவே ஏற்கப்பட்டு அமலாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் வீட்டு வாடகைப் படி உள்ளிட்ட 197 அலவன்ஸ்கள் பற்றி ஊதியக்குழு ஆய்வு செய்தது. அவற்றில் 56 அலவன்ஸ்களை ரத்து செய்யவும், 37அலவன்ஸ்களை வேறு வகை அலவன்ஸ்களுடன் இணைக்கவும் பரிந்துரை செய்தது. 34 அலவன்ஸ்களில் திருத்தம் செய்து அறிக்கை சமர்ப்பித்தது.
7வது ஊதியக்குழு
இவற்றின்மீது அதிகாரிகள் குழு ஆய்வு செய்து அவர்களின் அறிக்கையும் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. நேற்று மாலையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. பிரதமர் மோடி தலைமையில்நடந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, 7வது சம்பள கமிஷன் பரிந்துரைத்த அலவன்ஸ்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த அலவன்ஸ்கள் உயர்வு வருகிற 1ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என்றார்.
வீட்டு வாடகைப்படி
ஹெச்ஆர்ஏ எனப்படும் வீட்டு வாடகைப்படி 24%, 16% மற்றும் 18% குறைவாக அளிக்கப்பட மாட்டாது. ஹெச்ஆர்ஏ ஊழியர்கள் பணிபுரியும் நகரங்களைப் பொருத்து அளிக்கப்படும். குறைந்த பட்சம் 18,000 ரூபாய் சம்பளம் வாங்குபவர்களுக்கு 30, 20 மற்றும் 10% வீட்டு வாடகைப்படி அளிக்கப்படும். இதனால் 7.5 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள்.
டிஏ கணக்கீடு
அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை அகவிலைப்படி தாண்டும் போது வீட்டு வாடகைப்படியை எக்ஸ்,ஒய்,இசட் நகரங்களுக்கு 10,20,30 சதவீதம் என அதிகரிக்கலாம் என்று ஊதியக்குழு பரிந்துரை செய்தது. ஆனால் அகவிலைப்படி 25 சதவீதத்தை தாண்டினாலே வீட்டு வாடகைப் படியை உயர்த்தலாம் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
அகவிலைப்படி
அடிப்படை ஊதியத்தில் 25 சதவிகிதம் அகவிலைப்படி என்ற அளவை தாண்டும் போது அதற்கேற்ப வீட்டுவாடகைப் படியும் 10,20,30 சதவிகிதமாக ஆக உயரும். 25 சதவிகிதத்துக்கும் கீழாக அகவிலைப்படி இருக்கும் போது வீட்டு வாடகைப்படி 8,16,24 சதவீதமாக இருக்கும். குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.18ஆயிரத்துக்கு, அடிப்படை வீட்டுவாடகைப் படி ரூ.1800,3600,5400 க்கு குறையாமல் இருக்கும்.
ஓய்வூதியதாரர்களின் அலவன்ஸ்
ஓய்வூதியர்களுக்கான மருத்துவ அலவன்ஸ் 500 ரூபாயில் இருந்து 1000 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. ஓய்வூதியர்களின் நலன்களை கருத்தில் கொண்டே மருத்துவப் படியை இரு மடங்காக உயர்த்தி இருக்கிறோம். பணியில் உள்ள ஊழியர்கள் 100சதவீதம் செயல்பட முடியாத பட்சத்தில் வழங்கப்படும் மாதாந்திர அலவன்ஸ் ரூ.4500ல் இருந்து ரூ.6750 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
உயரும் அலவன்ஸ்கள்
மருத்துவத்துறையில் மாதாந்திர நர்சிங் அலவன்ஸ் ரூ.4800ல் இருந்து ரூ.7200ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆபரேஷன் தியேட்டர் அலவன்ஸ் ரூ.360ல் இருந்து ரூ.540 ஆக அதிகரிக்கப்படும். நோயாளி கவனிப்பு அலவன்ஸ் என்ற பெயரில் மாதம் ரூ.2070 முதல் 2100 வரை வழங்கப்பட்டது. இனிமேல் ரூ.4100முதல் 5300வரை வழங்கப்படும்.
ராணுவ வீரர்கள் அலவன்ஸ்
சியாசின் பனிசூழ்ந்த மலைப்பகுதியில் பணிபுரியும் ராணுவ வீரர்களுக்கான மாதாந்திர சியாசின் அலவன்ஸ் ரூ.14ஆயிரத்தில் இருந்து ரூ.30ஆயிரமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதிகாரிகளுக்கான சியாசின் அலவன்ஸ் ரூ.21 ஆயிரத்தில் இருந்து 42,500 ஆக அதிகரிக்கிறது.
அரசுக்கு கூடுதல் செலவு
இந்த அலவன்ஸ்கள் உயர்வினால் 34 லட்சம் மத்தியஅரசு ஊழியர்களும், 14 லட்சம் ராணுவத்தினரும் பயன்அடைவார்கள். ஓய்வூதியதாரர்கள் 50லட்சம் பேரும் அலவன்ஸ் உயர்வினால் பயன் அடைந்துள்ளனர். இந்த அலவன்ஸ்கள் உயர்வால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.30,748.23 கோடி கூடுதல் செலவு பிடிக்கும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.