மீண்டும் நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்டம் பிறப்பிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: சர்ச்சைக்குரிய நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை மீண்டும் அவசர சட்டமாக பிறப்பிக்க மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் சில திருத்தங்களை செய்து புதிய மசோதாவை பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு கொண்டு வந்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதனால் மசோதாவை நிறைவேற்ற முடியாததால் நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை கடந்த சில மாதங்களுக்கு முன் மத்திய அரசு பிறப்பித்தது.
அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டால் அது தொடர்பான மசோதாவை நாடாளுமன்றத்தில் 6 மாதங்களுக்குள் நிறைவேற்ற வேண்டும். லோக்சபாவில் ஆளும் பாரதிய ஜனதா கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால் அங்கு இந்த மசோதா எளிதாக நிறைவேறிவிட்டது.
ஆனால் ராஜ்யசபாவில் பாரதிய ஜனதா கூட்டணிக்கு போதிய பெரும்பான்மை இல்லை. எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லாததால் ராஜ்யசபாவில் மசோதாவை தாக்கல் செய்வதில் இருந்து மத்திய அரசு பின்வாங்கியது.
இந்தசூழ்நிலையில், மத்திய அரசு பிறப்பித்த நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம் ஜூன் 4-ந் தேதியுடன் காலாவதி ஆவதால், மீண்டும் நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்டம் பிறப்பிக்க மத்திய அமைச்சரவை பரிந்துரைத்துள்ளது.
பிரதமர் மோடியின் இல்லத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.