ராஜஸ்தானில் ஜாதி மோதல் உச்சம்: 3 தலித்துகள் டிராக்டர் ஏற்றி கொடூர கொலை
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இரு தரப்பினர் மோதல் காரணமாக தலித் சமுதாயத்தைச் சேர்ந்த மூவர் டிராக்டர் ஏற்றிக் கொல்லப்பட்டனர். வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டதால் அங்கு பதற்றம் காணப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஜாட் மற்றும் தலித் மக்களுக்கு மத்தியில் அடிக்கடி மோதல் நடைபெறுவது வழக்கம். இரு தினங்களுக்கு முன்பு நாகவுர் மாவட்டத்தில் உள்ள தங்காவாஸ் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் கடந்த வியாழக்கிழமை ஜாட் இனத்தை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஜாட் இனத்தவர் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி உள்ள கிராமங்களில் புகுந்து வெறியாட்டம் நிகழ்த்தினர். இதில் ஏற்பட்ட மோதலில் நூற்றுக்கணக்கான தலித்களின் வீடுகளை சூறையாடியும், தீ வைத்தும் ஜாட் இனத்தவர் மோதலில் ஈடுபட்டனர். இதை தடுத்து நிறுத்த போராடியவர்கள் மீது ஜாட் இனத்தை சேர்ந்த சிலர் டிராக்டரை விட்டு மோதினர். இந்த சம்பவத்தில் ரத்னராம் மேக்வால் (65), பஞ்சாராம் (60), போகாராம் (45) ஆகியோர் சம்பவ இடத்திலேயே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி உயிர் இழந்தனர். மேலும் இந்த மோதலில் 6 பெண்கள் உள்பட 14 பேர் படுகாயமடைந்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஆயிரக்கணக்கான கிராம மக்கள் கையில் ஆயுதங்களுடன் மருத்துவமனையை முற்றுகையிட்டு அடித்து உடைத்தனர். இதில் மேலும் சிலர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆஜ்மீர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மோதல் ஏன்?
அப்பகுதியில் உள்ள விவசாய நிலம் தங்களுக்குத்தான் சொந்தம் என சில தலித் குடும்பத்தினரும், தங்களுக்குத்தான் சொந்தம் என ஜாட் குடும்பத்தினரும் கூறி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் நீண்டகாலமாக பிரச்னை இருந்து வருகிறது. இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் இரு தினங்களுக்கு முன்பு ஜாட் இனத்தவர் கூட்டிய பஞ்சாயத்தில் தலித் குடும்பத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்துதான் இங்கு கலவரம் ஏற்பட்டது என்று கலவரத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு கலவர தடுப்பு போலீசார், குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் ராஜஸ்தானில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.