காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரான மனுவை விசாரிக்க கூடாது.. மத்திய அரசு எதிர்ப்பு! தமிழகம் ஷாக்
டெல்லி: காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழகம்-கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களும் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உரியது கிடையாது என்று மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி தெரிவித்தார்.
காவிரி பங்கீடு குறித்து விசாரித்த நடுவர் மன்றம், 2007ம் ஆண்டு, பிப்ரவரி 5ம் தேதி, தனது இறுதி தீர்ப்பை வழங்கியது. இதன்படி, காவிரியில் ஓடும் மொத்த நீர் 740 டிஎம்சி (ஆண்டுக்கு) என அளவிடப்பட்டுள்ளது. இதில், கேரளாவுக்கு 30 டிஎம்சி, கர்நாடகாவுக்கு 270 டிஎம்சி, தமிழகத்துக்கு 419 டிஎம்சி, புதுச்சேரிக்கு 7 டிஎம்சி, சுற்றுப்புறச் சூழலுக்கு 10 டிஎம்சி, கடலில் சேரும் நீர் 4 டிஎம்சி என பங்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் கர்நாடகம் 192 டிஎம்சி நீரை மட்டுமே தமிழகத்திற்கு தர வலியுறுத்தப்பட்டுள்ளது. இதிலிருந்து 7 டிஎம்சி நீரை புதுவைக்கு கொடுக்க வேண்டும். மீதம் உள்ள நீரை காவிரியின் கிளை நதிகளான அமராவதி, பவானி, நொய்யல், பாலாறு ஆகியவற்றில் இருந்தும், மழை நீர் வந்து சேரும் ஓடைகள், பள்ளங்கள் மூலமும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
கர்நாடகாவுக்கான 270 டிஎம்சி நீரில் 192.5 டிஎம்சி நீரை மட்டும் அவர்கள் காவிரியில் இருந்து எடுக்க வேண்டும். மீதம் உள்ளதை அவர்களது மாநிலத்தின் இதர ஆதாரங்களில் இருந்து எடுக்க வேண்டும்.
இந்த தீர்ப்பில் திருப்தியில்லை என கூறி, தமிழகம், கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுமே சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தன. இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித்தவராய் அடங்கிய அமர்வு முன்னிலையில், இன்று காலை விசாரணைக்கு வந்தது. ஆனால் மத்திய அரசின், அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி கோர்ட்டுக்கு வராததால் வழக்கு விசாரணை, சிறிது நேரம், தள்ளி வைக்கப்பட்டது.
முகுல் ரோத்தகி மற்றொரு வழக்கில் ஆஜராகியிருந்ததால் தாமதமாக இந்த கோர்ட் ஹாலுக்கு வந்தார். இதையடுத்து, வழக்கு விசாரணை தொடங்கியது. இரு மாநிலங்களும், நடுவர்மன்ற தீர்ப்புக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கு விசாரணைக்கு ஏற்புடையதுதானா என்பது குறித்து மதியம் அறிவிப்பதாக கூறிய நீதிபதிகள், விசாரணையை மதியம் 2 மணிக்கு ஒத்தி வைத்தனர்.
மதியம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி வாதிடுகையில், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகா தாக்கல் செய்துள்ள மனுவை விசாரிக்க கூடாது. அரசியல் சாசனப்படி, இது விசாரணைக்கு ஏற்புடைய வழக்கு இல்லை என்றார்.இதனால் இரு மாநில வழக்கறிஞர்களுமே அதிர்ச்சியடைந்தனர். ஆனால், மேல்முறையீடு செய்வது தவறில்லை என்றும், அரசியல் சாசனத்தின்படி விசாரிக்கப்படும் என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என கூறிய மத்திய அரசு, இப்போது, மேல்முறையீட்டு மனுவிற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.