3 நாளில் காவிரி மேலாண்மை வாரியம்.. மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
டெல்லி: வரும் செவ்வாய்க்கிழமைக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியது. இதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. இது கர்நாடகாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான தமிழக அரசின் இடைக்கால மனுவை, கடந்த 20ம் தேதி,விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்துக்கு 21 முதல் 27ம் தேதி வரை 6 ஆயிரம் கன அடி காவிரி நீரை கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம் 30ம் தேதி (இன்று) வரை தமிழகத்துக்கு 6 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிடுமாறு கடந்த 27ம் தேதி உத்தரவிட்டது. இதை கர்நாடகா ஏற்கவில்லை. சட்டசபையை கூட்டி, தண்ணீர் விடமாட்டோம் என தீர்மானத்தை நிறைவேற்றியது.
இந்நிலையில் தமிழகம்-கர்நாடகா இடையே நேற்று நடைபெற்ற பேச்சுவாரத்தை தோல்வியில் முடிந்தது. இதை சுப்ரீம்கோர்ட்டில் இன்று மத்திய அரசு தெரிவித்தது. எனவே காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைப்பதுதான் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என நீதிபதிகள் கருதினர். உடனடியாக மத்திய அரசிடம் வரும் செவ்வாய்க்கிழமைக்குள், காவிரி மேலாண்மை வாரியத்தை, அமைக்க முடியுமா என நீதிபதிகள் கேட்டனர். இதற்கு மத்திய அரசு அட்வகேட் ஜெனரலும் ஒப்புதல் கொடுத்தார்.
இதையடுத்து மேலாண்மை வாரியத்தில் நியமிக்கப்பட உள்ள, நிபுணர்கள் பெயரை நாளை மாலை 4 மணிக்குள் பரிந்துரை செய்ய தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, கேரளா ஆகிய 4 மாநில அரசுகளுக்கும், சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது. வரும் செவ்வாய்க்கிழமைக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட், அக்டோபர் 6ம் தேதி, அதாவது வரும் வியாழக்கிழமைக்கு வழக்கை ஒத்தி வைத்தது. இந்த உத்தரவு கர்நாடகாவுக்கு பெரும் பின்னடைவாகியுள்ளது.
ஏற்கனவே சுப்ரீம்கோர்ட் 4 வாரத்திற்குள் மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், இப்போது அக்டோபர் 4ம் தேதிக்குள் மேலாண்மை வாரியத்தை அமைக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதற்கு சம்மதித்த மத்திய அரசுக்கும், பாஜகவுக்கு எதிராகவும் கர்நாடகாவில் போராட்டங்கள் வெடித்துள்ளன.