காவிரி மேலாண்மை வாரியம்... குடியரசுத்தலைவரை சந்தித்து முறையிட்ட மநகூ தலைவர்கள்
டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் இன்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசினர். மக்கள் நலக்கூட்டணியை சேர்ந்த வைகோ, திருமாவளவன், ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் குடியரசு தலைவரை சந்தித்து மனு அளித்தனர்.
காவிரி மேலாண்மை வாரியத்தில் மத்திய அரசு அடித்த பல்டி தமிழகத்தில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், இது தொடர்பாக பிரதமர் மோடி எதையும் பேசவும் இல்லை, யாரையும் சந்திக்கவும் மறுத்து வருகிறார். கர்நாடக முதல்வர் எட்டு முறை கடிதம் எழுதியும் அவரைச் சந்திக்கவில்லை. அதிமுக எம்.பிக்கள் அனுமதி கேட்டும் அவர்களையும் சந்திக்கவில்லை.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மனுக்கொடுத்தும் அவரையும் சந்திக்கவில்லை. இப்படி எவருமே சந்திக்க முடியாத நிலையில் காவிரி விவகாரம் தொடர்பாக இரு மாநில தலைவர்களும், பிரமுகர்களும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து வருகிறார்கள். அந்த வகையில் இன்று, மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் இந்திய குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியைச் இன்று டெல்லியில் சந்தித்து மனு அளிக்க சென்றனர்.
முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, காவிரி பிரச்சனையில் மத்திய அரசு, தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது. குடியரசுத்தலைவரை சந்தித்தால் நியாயம் கிடைக்கும் என்பதற்காக அவரை மட்டும் சந்திக்க இருக்கிறோம். பிரதமரை சந்திக்கவில்லை என்றார்.
பிரதமர் மோடி மறைமுகமாக கர்நாடக அரசுக்கு சாதகமாக செயல்படுகிறார். கர்நாடக அரசு சட்ட விரோதமாக அணை கட்டுவதற்கு மத்திய அரசு துணை போகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்துக்கு துரோகம் இழைக்கப்படுகிறது என்றும் குற்றம் சாட்டினார். எனவே காவிரி மேலாண்மை அமைக்க மத்திய அரசிடம் அறிவுறுத்தும்படி குடியரசுத்தலைவரை வலியுறுத்துவோம் என்றும் வைகோ கூறினார்.
இதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த டி.ராஜா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் டெல்லி சென்று பிரணாப் முகர்ஜியை இன்று காலையில் சந்தித்து மனு அளித்தனர்.
இந்த சந்திப்பிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கூட்டாக அவர்கள் பேசினர். காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சினையில் குடியரசுத்தலைவர் தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக டி.ராஜா தெரிவித்தார்.
கர்நாடகா நீர் தராத காரணத்தால் விவசாயிகளுக்கு 8 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறிய வைகோ, காவிரி விவகாரத்தில் குடியரசுத்தலைவர் தலையிட கோரினோம் என்றார். எங்களது கோரிக்கையை பரிசீலிப்பதாக குடியரசுத்தலைவர் தெரிவித்தார் என்றும் வைகோ கூறினார்.