காவிரி விவகாரம்: தமிழக அரசின் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் டிசம்பர் 3ல் விசாரணை
காவிரி பிரச்சனை தொடர்பாக தமிழக அரசு கடந்த 11ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது.
அந்த மனுவில் அது கூறியிருப்பதாவது,
2007 பிப்ரவரி மாதத்தில் காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பை அளிக்கையில் இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவை அமைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது. வரும் ஜூன் மாதத்தில் இருந்து தமிழகத்தில் விவசாயப் பணிகள் துவங்க இருக்கின்றன. எனவே, அடுத்த மாதத்தின் இறுதி வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை அமைக்கும்படி மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி. சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், ஷிவ் கீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் நேற்று ஆஜரானார். அப்போது அவர் காவிரி விவகாரம் பற்றி தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு மீது விரைவில் விசாரணை நடத்துமாறு கேட்டுக் கொண்டார். அவரது வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வரும் டிசம்பர் மாதம் 3ம் தேதி தமிழக அரசின் மனு மீது விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.