காவிரி நீருக்காக சண்டை போட்டால் நான் உண்ணாவிரதம் இருப்பேன் - உமா பாரதி
டெல்லி: காவிரி நீருக்காக கர்நாடக - தமிழக எல்லையில் ஒருவேளை பதற்றம் எழுந்தால் நான் காலவரையற்ற உண்ணாவிரதம் இருப்பேன் என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி கூறியுள்ளார்.
காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சினை தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின் படி தமிழக, கர்நாடக மாநில பிரதிநிதிகளுடன் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி, டெல்லியில் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், தமிழக முதல்வர் சார்பில் பொதுப்பணித் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அரசு மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதேபோல், கர்நாடக மாநிலம் சார்பில் அம்மாநில முதல்வர் சித்தராமையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய சித்தராமையா, கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு நீர் திறக்க முடியாது. உண்மை நிலையை ஆராய நிபுணர் குழுவை மத்திய அரசு அனுப்பி ஆராய வேண்டும். தமிழகத்துக்கு நீர் திறந்தாள் கர்நாடகத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என்றார்.
தமிழக முதல்வர் சார்பில் தலைமை செயலர் வாசித்த உரையில், உச்ச நீதிமன்ற உத்தரவை கர்நாடகா மீறுவது அரசியல் சாசனத்தை மீறும் செயலாகும். காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டது. மேலும், நிபுணர் குழுவை அமைக்கவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி, இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. நிபுணர் குழுவை அமைக்க கர்நாடகா கோரியுள்ளது. அதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால், இரு மாநில அரசுகளும் பிரச்னையை தீர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளது. இரு மாநிலங்களின் கோரிக்கைகளையும் உச்ச நீதிமன்றத்தில் சமர்பிப்போம் என்றார்.
மேலும், நீதிமன்றத்துக்கு வெளியே இரு மாநில அரசுகளும் பிரச்னையை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவித்த உமா பாரதி, தமிழக - கர்நாடக எல்லையில் ஒருவேளை பதற்றம் எழுந்தால் நான் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க தயாராக உள்ளேன் என்றும் கூறினார்.