உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் நீர் திறப்பு தொடரும்.. கேபினட் கூட்டத்தில் முடிவு: சித்தராமையா
பெங்களூர்: தமிழகத்திற்கு செல்லும் காவிரி நதி நீரை நிறுத்திவிட்டு, முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதுகுறித்து ஆலோசிக்க அவசர அமைச்சரவை கூட்டம் பெங்களூரில் கூடியது. ஆனால் அப்படி எதையும் செய்ய வேண்டாம் என கேபினட் முடிவு செய்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் நீர் திறப்பு தொடரும் என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
தமிழகத்திற்கு காவிரியிலிருந்து 10 நாட்களுக்கு தினமும் 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கர்நாடகா தாக்கல் செய்த சீராய்வு மனுவை விசாரித்த நீதிமன்றம், நேற்று முதல் தினமும் தலா 12 ஆயிரம் கன அடி தண்ணீரை 20ம் தேதிவரை தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
சீராய்வு மனு காரணமாக கூடுதலாக 30 ஆயிரம் கன அடி தண்ணீர், தமிழகத்திற்கு கிடைக்கும். இதனால் மேலும் கோபமடைந்த கன்னட அமைப்புகள் மற்றும் சில விஷமிகள் நேற்று பெங்களூரில் பெரும் கலவரங்களை நடத்தினர்.
தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள், வர்த்தக நிறுவனங்களை தேடி தேடி அடித்து நொறுக்கினர். இந்நிலையில் கர்நாடக அமைச்சரவை கூட்டம் இன்று மதியம் 12 மணியளவில் பெங்களூரில் கூடியது. முதல்வர் சித்தராமையா தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தின்போது, தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய சித்தராமையா முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது. காவிரி நதிநீரிலிருந்து தமிழகத்திற்கு செல்லும் தண்ணீரை நிறுத்திவிட சித்தராமையா திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியது.
இது கோர்ட் அவமதி்ப்பு என்றபோதிலும், அரசியல் ரீதியாக பெரும் வாக்குகளை காங்கிரசுக்கு ஈட்டித்தரும் என்பதால் இந்த முடிவை காங்கிரஸ் அரசு எடுக்க உள்ளதாக கூறப்பட்டது.
இதுகுறித்தெல்லாம், இன்று கேபினட் மீட்டிங்கில் ஆலோசிக்கப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நீரை திறந்துவிடுவது என அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சித்தராமையா நிருபர்களிடம் இதை தெரிவித்தார். கர்நாடகாவுக்கு கஷ்டம் என்றபோதிலும், உச்சநீதிமன்ற உத்தரவை மதித்து கர்நாடகா தண்ணீர் திறப்பை தொடரும். கர்நாடக நிலைமை குறித்து பிரதமர் மோடியை நாளை டெல்லியில் சந்திக்க உள்ளேன் என சித்தராமையா கூறினார்.
அதேநேரம், கர்நாடகாவில் கலவரத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டதாக சித்தராமையா தெரிவித்தார். அமைச்சரவை முடிவு கன்னட அமைப்பினர் மீது அதிருப்தியிலுள்ளனர். இதனால் பெங்களூரில் பதற்றம் அதிகரித்துள்ளது.