காவிரி கர்நாடகாவிற்கே! தமிழகத்திற்குத் தண்ணீர் தர முடியாது.. கர்நாடக சட்டசபை தீர்மானம்!
பெங்களூரு : காவிரி தண்ணீர் கர்நாடக குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும். பெங்களூர் உள்ளிட்ட காவிரி பாசன பகுதிகளிலுள்ள கர்நாடகாவிற்கு மட்டுமே 4 அணை நீர் திறக்கப்படும் என்றும், வேறு எந்த பயன்பாட்டுக்கும் 4 அணைகளையும் திறக்க கூடாது என கர்நாடக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு செப்டம்பர் 21ம் தேதி முதல் 27ம் வரை காவிரியில் தினமும் 6,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் கடந்த செவ்வாய் கிழமையன்று உத்தரவிட்டது.
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்பதும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவாகும். இது குறித்து விவாதிக்க முதல்வர் சித்தராமைய்யா தலைமையில் அனைத்துக் கட்சிக்கூட்டம் பெங்களூருவில் புதன்கிழமையன்று நடைபெற்றது. இதில் உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சட்டமன்றத்தை கூட்டி இதுதொடர்பாக தீர்மானம் போடுவது என்று அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. மேலும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதில்லை என்ற முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.
சட்டசபை சிறப்பு கூட்டம்
தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்கமாட்டோம் என்று கர்நாடகா கூறி வருகிறது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கூட தண்ணீரை முற்றிலும் நிறுத்தி விட்டது கர்நாடகா. காலை 11 மணிக்கு சட்டசபை கூட்டம் தொடங்கும் என்று சட்டசபை செயலாளர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் சட்டசபை கூட்டம் தொடங்குவது தாமதமாகிக்கொண்டு சென்றது. மதியம் 1 மணிக்குதான் பேரவை, மேலவை கூடின.
வந்தேமாதரம்
வழக்கத்திற்கு மாறாக, கூட்டம் தொடங்கியபோது, தேசிய பாடலான 'வந்தே மாதரம்' இசைக்கப்பட்டது.
அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று மரியாதை செலுத்தியபிறகே பேரவை கூட்டம் தொடங்கியது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஒரு தீர்மானத்தை சட்டசபை நிறைவேற்ற திட்டமிட்டதாக கூறப்பட்ட நிலையில், வந்தே மாதரம் பாடல் மூலம் சட்டசபையை தொடங்கியுள்ளனர்.
தீர்மானம் நிறைவேற்றம்
இந்த நிலையில் இன்று கூடிய கர்நாடகா சட்டசபை கூட்டுக்கூட்டத்தில் காவிரி தண்ணீர் கர்நாடக குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும். பெங்களூர் உள்ளிட்ட காவிரி பாசன பகுதிகளிலுள்ள கர்நாடகாவிற்கு மட்டுமே 4 அணை நீர் திறக்கப்படும் என்றும், வேறு எந்த பயன்பாட்டுக்கும் 4 அணைகளையும் திறக்க கூடாது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் தாக்கல் செய்தார் ஒருமானதாக நிறைவேற்றவும் கோரிக்கை விடுத்தார்.
உச்சநீதிமன்றம்
இந்தத் தீர்மானத்தின் பின் விளைவு வரும் 27ம் தேதி உச்சநீதிமன்றத்தில் காவிரி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது தெரிய வரும். அப்போது ஒட்டுமொத்த கர்நாடக அரசும் உச்சநீதிமன்றத்தால் கடுமையாக கண்டிக்கப்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. அதேசமயம், மத்திய அரசுக்கும் கூட நெருக்கடியான உத்தரவுகளை உச்சநீதிமன்றம் பிறப்பிக்கக் கூடும் என்று தெரிகிறது.