ரூ5.70 கோடி பிடிபட்ட வழக்கு: தமிழக அமைச்சரின் உறவினர் உட்பட 7 பேர் அதிரடி கைது
தமிழகம், கர்நாடகாவில் ரூ5.70 கோடி பிடிபட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தமிழக அமைச்சர் ஒருவரின் உறவினரும் சிக்கியதாக கூறப்படுகிறது.
பெங்களூரு: புதிய ரூபாய் நோட்டுகள் பதுக்கப்பட்ட வழக்கில் அதிரடியாக தமிழகத்தின் 'பவர்புல்' அமைச்சர்களில் ஒருவரது உறவினர் உட்பட 7 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் மேலும் பல விவிஐபிகள் சிக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
கர்நாடக மாநில காவிரி நீர்ப்பாசன கழக நிர்வாக இயக்குனர் சிக்கராயப்பா, கர்நாடக நெடுஞ்சாலை மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர் ஜெயந்திரா ஆகியோர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி புதிய ரூ2,000 நோட்டுகளுடன் ரூ5.7 கோடி ரொக்கத்தைக் கைப்பற்றினர். பின்னர் இது தொடர்பாக ஈரோட்டிலும் சிலர் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
ஈரோட்டில் சோதனை நடத்தப்பட்டது தமிழக அமைச்சர் ஒருவரின் உறவினர் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். ஈரோடு சோதனையில் ரூ.152 கோடி மதிப்பிலான ரொக்கமும் சிக்கியது.
இது தொடர்பாக சிபிஐ, அமலாக்க பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தற்போது இவ்வழக்கில் தமிழக அமைச்சரின் உறவினர் உட்பட 7 பேரை சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர். இவ்வழக்கில் மேலும் பல விவிஐபிகள் அடுத்தடுத்து சிக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது.