கலைஞர் டிவிக்கு சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு: ஆ.ராசா, கனிமொழி பதில்கள் கோர்ட்டில் இன்று பதிவு!!
டெல்லி: கலைஞர் டி.வி.க்கு சட்டவிரோதமாக ரூ200 கோடி பணம் பரிமாறியது தொடர்பான அமலாக்கப் பிரிவின் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி ஆகியோரது பதில்கள் டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் இன்று பதிவு செய்யப்படுகிறது.
ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு ஸ்பெக்கெட்ரம் அலைக்கற்றை ஒதுக்கியதற்கு ஆதாயமாக கலைஞர் டி.வி.க்கு ரூ200 கோடி பணம் சட்டவிரோதமாக கைமாறியது என்பது அமலாக்கப் பிரிவின் வழக்கு. இவ்வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி, கனிமொழி, திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு, ஸ்வான் டெலிகாம் பிரைவேட் லிமிடெட் மேம்பாட்டாளர்கள் சாகித் உஸ்மான் பல்வா, வினோத் கோயங்கா உள்ளிட்ட 19 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஏப்ரல் 25-ஆம் தேதி அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில் அரசுத் தரப்பு சாட்சிகளின் விசாரணை கடந்த நவம்பர் 17-ந் தேதி முதல் நடைபெற்று வந்தது. இதில் 25 சாட்சிகளின் வாக்குமூலங்கள் சுமார் 600 பக்கங்களுக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.
400 கேள்விகளுக்கு பதில்
இதைத்தொடர்ந்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 19 பேரும் மொத்தம் 400 கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு 225 பக்கங்கள் கொண்ட கேள்வித் தாளை நீதிபதி ஓ.பி. சைனி கடந்த 4-ந் தேதி அளித்தார்.
பதில்கள் பதிவு
இந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் நடைபெறுகிறது. இன்று குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 19 பேரின் பதில்களையும் பதிவு செய்யும் பணி தொடங்கும் என்று தெரிகிறது.
இறுதிக்கட்ட விசாரணை
இதையடுத்து, கலைஞர் டி.வி.க்கு சட்டவிரோதமாக பணம் கைமாறிய வழக்கின் விசாரணை இறுதி கட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.