ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் வீட்டில் ரெய்டு ஏன்? சிபிஐ அதிகாரி சொல்லும் காரணம் இதுதான்!
டெல்லி: முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனை குறித்து சிபிஐ அதிகாரி வினீத் விநாயக் விளக்கம் அளித்துள்ளார்.
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடுகளில் 6 மணி நேரத்திற்கும் மேலாக சிபிஐ சோதனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கார்த்தி சிதம்பரம் அவரின் நுங்கம்பாக்கம் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.
கடந்த 2007-08ம் ஆண்டில் வெளிநாடு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் மூலம், ஐஎன்எக்ஸ் மீடியா குழுமத்திற்கு ஒப்புதல் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கு இது என சிபிஐ வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
இந்நிலையில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து சிபிஐ அதிகாரி வினீத் விநாயக் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மொரீசியஸை சேர்ந்த 3 நிறுவனங்கள் ஐஎன்எக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். ரூ 4.6 கோடிக்கு அனுமதி பெற்று பல கோடி ரூபாய் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
ஒரு பங்குக்கு ரூ 800 கூடுதல் என்ற கணக்கில் இந்தியாவுக்குள் கூடுதல் முதலீடு வந்துள்ளது. கூடுதலாக கொண்டு வரும் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தது ஐஎன்எக்ஸ் நிறுவனம். கூடுதலாக கொண்டு வரப்பட்ட முதலீடுக்கு கார்த்தி சிதம்பரத்தின் செஸ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் நிறுவனம் உதவி செய்துள்ளது. கூடுதல் முதலீட்டுக்கு அனுமதி பெற்று தந்து ரூ10 லட்சத்தை அந்த நிறுவனம் வாங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.