8 மணி நேரத்தில் 100 கேள்விகள்.. சிபிஐ அதிகாரிகளிடம் அசராமல் பதிலளித்த கார்த்தி சிதம்பரம்!
டெல்லி: கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று 8 மணி நேரத்துக்கும் அதிகமாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டுள்ளன.
கார்த்திக் சிதம்பரம் நடத்திவரும் தொழிலுக்கு எவ்வாறு கட்டணம் பெறப்படுகிறது, மறைமுகமாக ஏதேனும் தொழில் நடத்துகிறாரா என்பது குறித்த தகவல்களை சிபிஐ கேட்டறிந்துள்ளது.
மொத்தம் 100 கேள்விகள் கேட்க தயாரிக்கப்பட்டிருந்ததாம்.
ஒத்துழைப்பு
கார்த்தி சிதம்பரம், சிபிஐ அதிகாரிகளுக்கு உரிய வகையில் ஒத்துழைத்து பதில் அளித்ததாக சிபிஐ வட்டாரங்கள் 'ஒன்இந்தியாவிடம்' தெரிவித்தன. முன்னதாக, கார்த்தி சிதம்பரம், தங்களது விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என சில வட இந்திய ஊடகங்கள் ஒளிபரப்பிய செய்திகளில் உண்மையில்லை என்றும், அவர் அதிகாரிகளுக்கு ஒத்துழைத்தார் என்றும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
8 மணி நேர விசாரணை
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் நேற்று கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்தினர். காலை 10.20 மணிக்கு ஆரம்பித்த விசாரணை இரவு 7 மணிவரை தொடர்ந்தது.
நெருக்கமானவர்களிடம் விசாரணை
இதனிடையே ஏஎஸ்சிபிஎல் இயக்குநர்கள் ரவி விஸ்வநாதன், மோகனன் ராஜேஷ் ஆகியோரிடமும் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளது. கார்த்தி சிதம்பரத்தின் பட்டய கணக்காளரான பாஸ்கரராமனிடமும் விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளது.
மீண்டும் விசாரணை
ஆகஸ்ட் 28ம் தேதி கார்த்தியிடம் மீண்டும் விசாரணை நடத்த உள்ள நிலையில், அன்று மேற்கண்டோரிடமும் சிபிஐ விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாம்.