ப.சிதம்பரத்தின் வீட்டில் நடத்தப்பட்ட சிபிஐ ரெய்டு- ஷீனா போரா கொலையுடன் தொடர்பு?
ஷீனா போரா கொலை வழக்கில் ஏதேனும் ஆதாரங்கள் கிடைக்கக் கூடும் என்பதற்காக ப.சிதம்பரத்தின் வீட்டில் சிபிஐ ரெய்டு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
சென்னை: ஷீனா போரா கொலையின் பின்புலத்தில் பணப்பிரச்சினை இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின்பேரிலும் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் வீடுகளில் சிபிஐ ரெய்டு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் வீடு உள்பட 14 இடங்களில் சிபிஐ விசாரணை நடத்தப்பட்டது. மேலும் மும்பை வோர்லி பகுதியில் உள்ள பீட்டர் முகர்ஜி மற்றும் இந்திராணி முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமான ஐஎன்எக்ஸ் நிறுவனத்திலும் சோதனை நடைபெற்றது.
2007-2008-ஆம் ஆண்டில் வெளிநாடு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் மூலம், ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடந்திருக்கலாம் என்பதே ப.சிதம்பரத்தின் மீது குற்றச்சாட்டு. இந்த நிறுவனமானது பீட்டர் முகர்ஜி மற்றும் இந்திராணி முகர்ஜிக்கு சொந்தமானதாகும்.
இந்திராணி முகர்ஜியின் முதல் கணவருக்கு பிறந்த ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணியும், பீட்டரும் சிறையில் உள்ளனர். இந்த கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. மேலும் ஷீனா பெயரில் சிங்கப்பூரில் உள்ள ஒரு வங்கியில் கணக்கு தொடங்கியிருப்பது குறித்த விவரங்களையும் சிபிஐ சேகரித்து வருகிறது.
பண மோசடி புகாருக்கு இடையில் கடந்த 2009-இல் முகர்ஜி தம்பதி அவர்களது மீடியா தொழிலை விற்றுவிட்டதாகவும் சிபிஐ கூறுகிறது. வெளிநாடு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் ரூ.4 கோடி அன்னிய முதலீடு செய்ய அனுமதி அளித்த போதிலும் அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ரூ.305 கோடி முதலீடு செய்ய முகர்ஜி தம்பதிக்கு அனுமதி அளித்தார்.
எனவே ஷீனா போரா கொலையின் பின்புலத்தில் பணப்பிரச்சினை ஏதேனும் இருக்கக் கூடும் என்பதாலும் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி ஆகியோரது வீடுகளில் அது தொடர்பான ஆவணங்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இந்த சோதனை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.