ரூ.950 கோடி வங்கி மோசடி வழக்கு.. தொழிலதிபர் விஜய் மல்யா வீடு, அலுவலகங்களில் சிபிஐ ரெய்டு
பெங்களூர்: தொழிலதிபர் விஜய் மல்யா மீது ரூ.950 கோடி மதிப்புள்ள, வங்கி மோசடி தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள சிபிஐ, அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று அதிரடி சோதனைகளை நடத்தியது.
மதுபான தொழிலதிபரும், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் அதிபருமாக விளங்கிய விஜய் மல்யா பல்வேறு வங்கிகளில் அளவுக்கு அதிகமான கடன் வாங்கி அதை திருப்பி செலுத்தாமல் உள்ளார். அதில் ஐடிபிஐ வங்கியில் வாங்கிய ரூ.950 கோடி கடனும் அடங்கும்.
மல்யா மீது நடவடிக்கை எடுக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், சிபிஐ, அவர் மீது வங்கி மோசடி வழக்கை பதிவு செய்துள்ளது. மேலும், பெங்களூர், மும்பை, கோவா ஆகிய நகரங்களிலுள்ள மல்யாவின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இன்று ஒரே நேரத்தில், சிபிஐ சோதனை நடத்தி பல ஆவணங்களை பறிமுதல் செய்தது.
மல்யாவுக்கு விதிகளை மீறி கடன் அளித்ததற்காக, ஐடிபிஐ வங்கி அதிகாரிகள் சிலர் மீதும் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், கிங்பிஷர் நிறுவனத்திற்காக இந்த கடனை மல்யா வாங்கியிருந்ததால், அந்த நிறுவன இயக்குநரான ஏ.ரகுநாதன் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளது சிபிஐ.