கர்நாடகா அதிகாரி டி.கே.ரவி மரணம் குறித்து விசாரிக்க வருகிறது 'ஒன்லி' சென்னை சி.பி.ஐ. டீம்!
பெங்களூர்/சென்னை: கர்நாடகா ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே. ரவி மரணம் குறித்து சென்னையில் உள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் குழு விசாரணை நடத்தை இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்குழுவில் கர்நாடகாவைச் சேர்ந்த எந்த ஒரு சி.பி.ஐ. அதிகாரியும் இடம்பெறமாட்டார்கள் என்றும் தெரியவந்துள்ளது.
கர்நாடக வணிக வரித்துறை கூடுதல் கமிஷனராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி கடந்த 16-ந் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த மரணத்தின் பின்னணியில் ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் இருக்க கூடும் என்று கர்நாடக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இதனால் ரவியின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று போராட்டங்கள் வெடித்தன. ஆனால் கர்நாடகா முதல்வர் சித்தராமையாவோ பிடிவாதமாக சி.ஐ.டி. விசாரணையே போதுமானது என்று கூறிவந்தார். ஆனால் இதனை எதிர்க்கட்சிகள் நிராகரித்தன.
இதனைத் தொடர்ந்து வேறுவழியின்று கர்நாடகா சட்டசபையில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுவதாக சித்தராமையா அறிவித்தார்.
தற்போது இந்த வழக்கை சென்னையில் உள்ள சி.பி.ஐ. அதிகாரிகளே விசாரிக்க இருப்பதாக சி.பி.ஐ. அதிகாரிகள் ஒன் இந்தியாவுக்குத் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விசாரணைக் குழுவில் கர்நாடகாவைச் சேர்ந்த எந்த ஒரு சி.பி.ஐ. அதிகாரியும் இடம்பெறவும் மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக கர்நாடகா சி.ஐ.டி. போலீசார் இவ்வழக்கில் இதுவரை விசாரித்து பெறப்பட்ட தகவல்களை சி.பி.ஐ. அதிகாரிகள் கேட்டுப் பெற உள்ளனர். அதன் பின்னர் ரவியின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து போஸ்ட்மார்டம் அறிக்கையை ஆராய்கின்றனர். அதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் ரவியின் உடல் தோண்டி எடுக்க வாய்ப்பிருக்கிறது. ரவியின் உடலின் விஷ ஊசி போட்டுவிடப்பட்டு பின்னர் தூக்கில் தொங்கவிடப்பட்டார் என்ற தகவலும் இருப்பதால் சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த கோணத்திலும் ஆராய்வர்.
மேலும் ரவியின் செல்போன் அழைப்புகள், வாட்ஸ் அப் மெசேஜ்கள், எஸ்.எம்.எஸ்.கள் ஆகியவற்றையும் சி.பி.ஐ. டீம் ஆராயும். மொத்தம் 272 மெசேஜ்கள் அவரது செல்போனில் பதிவாகி இருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல் அரசியல்வாதிகள்- ரவி இடையெயான மோதல்கள் பற்றியும் சென்னை சி.பி.ஐ. டீம் ஆராய உள்ளது. பின்னர் ரவியின் நண்பர்கள், குடும்பத்தினரையும் விசாரிக்க இருக்கும் சி.பி.ஐ, ரவியின் அப்பார்ட்மென்ட்டின் சி.சி.டி.வி. கேமரா பதிவுகளும் ஆராயப்பட இருக்கிறது. ரவியின் மரணம் குறித்த சென்னை சி.பி.ஐ.டீம் விசாரணை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.