ஆதர்ஷ் ஊழல்: மகா. மாஜி முதல்வர் அசோக் சவாண் மீது வழக்கு தொடர ஆளுநரிடம் மீண்டும் அனுமதி கோரியது சிபிஐ
மும்பை: ஆதர்ஷ் வீட்டு வாரிய ஊழல் தொடர்பாக மகராஷ்டிர மாநில முன்னாள் முதல்வரான காங்கிரஸைச் சேர்ந்த அசோக் சவாண் மீது வழக்குப் பதிவு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று அம்மாநில ஆளுநரிடம் சி.பி.ஐ. மீண்டும் மனு அளித்துள்ளது.
கடந்த 2010 ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தை காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தபோது ஆதர்ஷ் வீட்டு வசதி வாரிய முறைகேடு நடந்தததாக புகார் எழுந்தது.
முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ராணுவத்தில் இறந்த வீரர்களின் குடும்பத்தினருக்காகக் கட்டப்பட்ட குடியிருப்புகளில், அப்போதைய முதல்வர் அசோக் சவாணின் உறவினர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து அசோக் சவாண் பதவி விலகினார்.
இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் சவான் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துவதற்கு அனுமதி வழங்க வலியுறுத்தி சிபிஐ கடந்த 2013 ஆம் ஆண்டு அப்போதைய ஆளுநர் கே.சங்கரநாராயணனிடம் முறையிட்டனர். ஆனால் ஆளுநர் அனுமதி வழங்கவில்லை.
இதையடுத்து விசாரணை நீதிமன்றத்தில் ஆளுநர் அனுமதி வழங்காததால் சவாண் பெயரை குற்றவாளிகள் பட்டியலிலிருந்து நீக்குமாறு சிபிஐ கோரிக்கை விடுத்தது. அதற்கு நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்ததையடுத்து சிபிஐ அதிகாரிகள் மும்பை உயர் நீதிமன்றத்தை நாடினர்.
கடந்த நவம்பர் மாதம் சிபிஐயின் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், ஆளுநர் இந்திய தண்டனைச் சட்டத்தின் படி சதி வழக்குப் பதிவு செய்வதற்குதான் அனுமதி அளிக்கவில்லை. ஆனால், சவான் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யலாம் என்றனர்.
இந்நிலையில் மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் சாவிடம் மீண்டும் மனு அளித்துள்ளனர் சிபிஐ அதிகாரிகள். அதில் அசோக் சவாண் மீது வழக்குத் தொடருவதற்கு புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அசோக் சவாண் மீது வழக்குப் பதிவு செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா மாநில அமைச்சரவையும் ஆளுநர் வித்யாசாகருக்கு பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.