சாரதா நிதி நிறுவன மோசடி: மமதாவை சி.பி.ஐ. விசாரிக்க பா.ஜ.க. வலியுறுத்தல்!
கொல்கத்தா: சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமாம மமதா பானர்ஜியையும் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட சாரதா நிதி நிறுவனம், முதலீட்டாளர்களின் பணத்தை மோசடி செய்த வழக்கு பல்வேறு பரபரப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மோசடியில் தொடர்புடையதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரு எம்.பி.க்கள், மேற்கு வங்க போக்குவரத்துத் துறை அமைச்சர் மதன் மித்ரா ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலர் முகுல் ராயிடம் சி.பி.ஐ. நேற்று 5 மணிநேர விசாரணை நடத்தியது.
இதனைத் தொடர்ந்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியிடமும் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா வலியுறுத்தியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் சித்தார்த் நாத் சிங் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சாரதா நிதி நிறுவனத் தலைவர் சுதிப்தா சென், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, முகுல் ராய் ஆகியோர் டார்ஜிலிங் மாவட்டம், டெலோவில் சந்தித்துப் பேசியுள்ளனர்.
இதனை முகுல் ராய் வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டார். தற்போது, முகுல் ராயை அழைத்து சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது.
இதே சட்டம் மமதாவிற்கும் பொருந்தும். இந்த விவகாரத்தில் சி.பி.ஐ.க்கு இரு வேறு அளவுகோல் இருக்க முடியாது. எனவே, மமதாவிடம் சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு சித்தார்நாத் சிங் கூறினார்.