ஐடி ரெய்டில் சிக்கியது என்ன... கார்த்தி சிதம்பரத்திற்கு சம்மன்... டெல்லியில் விசாரிக்க சிபிஐ முடிவு
முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை டெல்லிக்கு அழைத்து விசாரிக்க விரைவில் சம்மன் அனுப்ப சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி: முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீடு, அலுவலகங்களில் நேற்று வருமானவரித் துறையினர் ரெய்டு நடத்தினர். அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் கார்த்தியிடம் விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் வீடுகளில் நேற்று காலை முதல் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். வீடுகள் மட்டுமின்றி, சென்னை, காரைக்குடி, டெல்லி, நொய்டா உள்பட 14 இடங்களில் சிதம்பரம் குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்கள், அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டன. இதில் சென்னையில் மட்டும் 8 இடங்களில் ரெய்டு நடைபெற்றது.
சுமார் 7 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அந்த ஆவணங்களின் அடிப்படையில் விசாரிக்க கார்த்தி சிதம்பரத்திற்கு சம்மன் அனுப்ப சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி சிபிஐ தலைமையகத்தில் வைத்து கார்த்தி சிதம்பரத்திடம் விசாரிக்கப்படும் என்று தெரிகிறது. அப்போதே, பீட்டர் முகர்ஜி மற்றும் இந்திராணி முகர்ஜியிடமும் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையில் நடைபெற்ற வருமானவரிச் சோதனைக்கு பின்னர் ஐஎன்எக்ஸ் நிறுவன விவகாரம் தொடர்பாக கார்த்தியிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.