இணையதளத்தில் வெளியானது சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்!
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
டெல்லி: சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளன. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேர்வில் நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர்.
தமிழகத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். கருணை மதிப்பெண் உள்ளிட்ட சர்ச்சைகளுக்குப் பிறகு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
பத்து மண்டலங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிட்டது. தேர்வு முடிவு www.results.nic.in,www.cbs-e-r-esults.nic.in, மற்றும் www.cbse.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் வெளியாகியுள்ளது.
நாட்டிலேயே அதிகபட்சமாக டெல்லியில் 2,58,321 பேர் இந்த ஆண்டு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்கீழ் பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளனர். ஆனால் சிபிஎஸ்இ பிளஸ்டூ தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு சரிந்துள்ளது.
கடந்த ஆண்டு 83 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் நடப்பாண்டு தேர்ச்சி விகிதம் 82 சதவீதமாக குறைந்துள்ளது. வினாத்தாள் கடினமானதாக இருந்ததே இதற்கு காரணம் எனக்கூறப்படுகிறது. இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு சிபிஎஸ்இ மாணவர்களுக்கே உதவியாக இருக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில் சிபிஎஸ்இ ரிசல்ட் குறைந்திருப்பது மாணவர்களிடை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.