சிபிஎஸ்இ ப்ளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாக வாய்ப்பு!
சிபிஎஸ்இ ப்ளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி: சிபிஎஸ்இ ப்ளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கருணை மதிப்பெண் வழங்கவும் சிபிஎஸ்இ பள்ளிகள் திட்டமிட்டுள்ளன.
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. கடினமான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்கும் திட்டத்தை கைவிடுவதாக சிபிஎஸ்இ உட்பட 32 கல்வி வாரியங்கள் அறிவித்தன.
இதனை எதிர்த்த டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் சிபிஎஸ்இயின் முடிவை ரத்து செய்து டெல்லி உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
சிபிஎஸ்இக்கு கண்டனம்
மாணவர்கள் தேர்வு எழுவதற்கு முன்பு கடினமான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்படும் என தெரிவித்து விட்டு, இப்போது வழங்க முடியாது என சிபிஎஸ்இ அறிவித்தது நியாயமற்றது என நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
நிறுத்தப்பட்ட தேர்வு முடிவு
இதையடுத்து நேற்று முன்தினம் வெளியாவதாக இருந்த சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த புதன் கிழமை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் உயர் நிலைக் கூட்டம் நடைபெற்றது.
மதித்து செயல்பட முடிவு
அப்போது உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் சிபிஎஸ்இ கல்வி வாரியங்கள் டெல்லி உயர்நீதிமன்றத் உத்தரவை மதித்து செயல்பட சிபிஎஸ்இ முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கருணை மதிப்பெண் வழங்க திட்டம்
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் திட்டத்தை கைவிட சிபிஎஸ்இ பள்ளிகள் முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கருணை மதிப்பெண் வழங்க சிபிஎஸ்இ கல்வி வாரியம் திட்டமிட்டுள்ளதகாவும் கூறப்படுகிறது.
நாளை மறுநாளுக்குள் முடிவு
சிபிஎஸ்இ கல்வி வாரியத்தின் இந்த முடிவால் நாளை மாலைக்குள் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் என கூறப்படுகிறது. இல்லை எனில் ஞாயிற்றுக்கிழமைக்குள் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.