சி.பி.எஸ்.இ. மதிப்பெண் குளறுபடி வழக்கு விசாரணை… நாளை ஒத்திவைப்பு
சி.பி.எஸ்.இ. மதிப்பெண் குளறுபடி தொடர்பான வழக்கை நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்.
டெல்லி: சி.பி.எஸ்.இ. விடைத்தாள் திருத்தத்தில் தவறு நடந்து இருக்கலாம் என்று கருத்துத் தெரிவித்துள்ள டெல்லி உயநீதிமன்றம், அது தொடர்பான வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு வெளியான சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு தேர்வுகளில், நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கே ஒன்றிரண்டு பாடங்களில் குறைவான மதிப்பெண்கள் கிடைத்துள்ளன. இது மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது.
இதனையடுத்து அவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த நிலையில், மறுகூட்டலில் 45 மதிப்பெண்கள் வரை கூடுதலாகக் கிடைத்தது. இதன் மூலம், மதிப்பெண் கூட்டலில் குளறுபடி நடந்திருப்பதாக வலுவான புகார் எழுந்தது.
வழக்கு
இதனை எதிர்த்து, மாணவர்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சீவ் சச்தேவா, ஏ.கே.சாவ்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் கேள்வி
அப்போது, மதிப்பெண் குளறுபடி குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். 'மதிப்பெண் கூட்டலிலேயே இவ்வளவு தவறுகள் நடந்திருந்தால், விடைத்தாள் திருத்தத்தில் எவ்வளவு தவறு நடந்திருக்கும்?' என்று தங்களது அதிர்ச்சியை நீதிபதிகள் தெரிவித்தனர்.
உரிய நடவடிக்கை
சி.பி.எஸ்.இ. சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'மாணவர்களுக்கு விடைத்தாள் நகல் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தவறுகளை சி.பி.எஸ்.இ. கவனத்துக்கு கொண்டு வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று நீதிபதிகள் முன்பு பதிலளித்தார்.
நாளை விசாரணை
இதனையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். நாளை விசாரணைக்கு பின்னர் மதிப்பெண் குளறுபடியில் ஒரு முடிவு பிறக்கும் என்று மாணவர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.