கருணை மதிப்பெண்கள் விவகாரம்: சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகாது
கருணை மதிப்பெண்கள் விவகாரம் காரணமாக இன்று சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் இன்று வெளியாகாது.
டெல்லி: கருணை மதிப்பெண்களை வழங்க வேண்டும் என்று டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து இன்று சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகாது.
நாடு முழுவதும் பல்வேறு தேர்வு மையங்களில் 10.98 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பிளஸ் 2 சிபிஎஸ்இ தேர்வை எழுதினர். இந்நிலையில் கடினமான கேள்விகளுக்கு அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கருணை மதிப்பெண்கள் கடந்த ஏப்ரல் மாதம் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் எனப்படும் சிபிஎஸ்இ ரத்து செய்தது.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் சிபிஎஸ்இ-யின் முடிவை எதிர்த்து டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இத்தனை ஆண்டுகளாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கருணை மதிப்பெண்களை ரத்து செய்வது பொறுப்பற்ற, நியாயமற்ற செயலாகும்.
இந்த முடிவை நடப்பாண்டே அமல்படுத்தினால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே கருணை மதிப்பெண்கள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றார். இந்த தீர்ப்பால் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களுடன் கருணை மதிப்பெண்களை சிபிஎஸ்இ சேர்க்க வேண்டிய உள்ளது. இதனால் இன்று தேர்வு முடிவுகள் வெளியாகாது.
டெல்லி நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து சிபிஎஸ்இ இயக்குநர் சதுர்வேதி, மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார். இதனால் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகாது. இந்த மாத இறுதியில் முடிவுகள் வெளியாகலாம் என்று தெரிகிறது.