பட்டென்று போன மின்சாரம்.. டார்ச் லைட்டாக மாறிய செல்போன்கள்.. நானா படேகர் நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி!
லட்டூர், மகாராஷ்டிரா: மகாராஷ்டிர மாநிலம் லட்டூர் நகரில், தற்கொலை செய்து கொண்ட வி்வசாயிகளின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சியில் நடிகர் நானா படேகர் கலந்து கொண்டபோது திடீரென மின்சாரம் போகவே, அங்கு வந்திருந்தவர்கள் செல்போன்களில் இருந்த டார்ச்சை ஆன் செய்து நிகழ்ச்சிக்கு ஒளியூட்டினர்.
நடிகர் நானா படேகர் வித்தியாசமானவர். வெறும் நடிகராக மட்டுமல்லாமல், நல்லதொரு மனிதராகவும் இருப்பவர் நானா. வில்லன் ரோலிலும் வித்தியாசப்படுத்தி ஹீரோக்களை அசரடித்தவர் நானா.
இந்த நிலையில் வறட்சிக்குப் பெயர் போன லட்டூரில், தற்கொலை செய்து கொண்ட விவசாயக் குடும்பங்களுக்கு நிதியுதவி அளித்து அசத்தியுள்ளார் நானா படேகர்.
ரூ. 15,000 நிதியுதவி...
லட்டூர் பகுதியில் வறட்சி காரணமாக தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ. 15,000 நிதியுதவியை அளித்தார் நானா படேகர். இதுதொடர்பான நிகழ்ச்சி லட்டூரில் நடந்தது.
தனித் தனியாக கொடுத்தார்...
நிகழ்ச்சிக்கு தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் மனைவியர் வந்திருந்தனர். அனைவரும் அரங்கில் அமர்ந்திருந்தனர். அவர்களை மேடைக்கு அழைத்து வழங்குவதை விட நேரிலேயே போய் வழங்க முடிவு செய்தார் படேகர்.
நெகிழ்ந்து போன விவசாயக் குடும்பத்தினர்...
இதையடுத்து நிதியுதவிக்கான காசோலையை ஒவ்வொரு விவசாயியின் மனைவியையும் அவரவர் இருக்கைக்கே போய் நானா படேகர் கொடுத்தபோது அந்தப் பெண்கள் கண்ணீர் மல்க உதவியைப் பெற்றுக் கொண்டனர்.
திடீரென போன கரண்ட்...
இந்த நிலையில் அரங்கில் திடீரென மின்சாரம் போய் விட்டது. இருள் சூழ்ந்தது. இதனால் அனைவரும் அமைதியில் உறைந்தனர்.
டார்ச்சாக மாறிய செல்போன்கள்...
அப்போதுதான் அந்த மேஜிக் நிகழ்ந்தது. அரங்கில் இருந்தவர்கள் தங்களது செல்போனில் இருந்த டார்ச்சை ஆன் செய்ய ஆரம்பித்தனர். இதனால் அந்த இடமே வானில் உலா வரும் நட்சத்திரக் கூடடம் போல மாறியது.
வெளிச்சப் புள்ளிகளுக்கு மத்தியில்...
இதைத் தொடர்ந்து நானா படேகரும், அவருடன் வந்த மராத்தி நடிகர் அனஸ்புரேவும் தொடர்ந்து நிதியுதவியை அளித்தனர். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் மின்சாரம் வந்தது.