டெல்லி ஏர்போர்ட் கார்கோவில் செல்போன்கள் திருடி “பிளிப்கார்ட்” பெயரில் விற்பனை - 6 பேர் கைது
டெல்லி: டெல்லி விமான நிலையத்திலிருந்து செல்போன்களைத் திருடி பிளிப் கார்ட் இணையதளத்தின் பெயரில் விற்ற 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் விமான நிலைய கார்கோவில் இருந்து செல்போன்களைத் திருடியதை கண்டறிந்த விமான நிலைய அதிகாரிகள் போலீசில் புகார் அளித்திருந்தனர்.
அவர்களிடமிருந்து கிட்டதட்ட 209 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு கிட்டதட்ட 40 லட்ச ரூபாய் ஆகும். டெல்லி விமான நிலையத்திலிருந்து அவர்கள் திருடியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், பிளிப் கார்ட்டில் விற்கப்பட்ட 20 செல்போன்களும் வாங்கியவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன. மைசூரு, பெங்களூரு, அகமதாபாத், ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட இடங்களில் இருந்து விற்கப்பட்ட செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன.
இத்திருட்டிற்கு ஒருசில கார்கோ ஊழியர்களே உறுதுணையாக இருந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், பிளிப் கார்ட் ஏஜெண்டுகள் மூலமாக இந்த விற்பனை நடைபெற்றதும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் பிளிப் கார்ட்டின் பிரதிநிதி ஒருவர், " எங்களுடைய 40,000க்கும் அதிகமான விற்பனையாளர்களும் ஒழுங்குமுறை விதிகளைப் பின்பற்றி நடக்கின்றனர். ஒரு சில ஏஜெண்டுகளால் இந்த விற்பனை தவறுதலாக நடைபெற்றுள்ளது. இதுகுறித்து கடுமையான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளோம்." என்று தெரிவித்துள்ளார்.