வெங்கய்ய நாயுடு ராஜினாமா.. மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்?
வெங்கய்ய நாயுடு துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ள நிலையில், மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் நிகழும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
டெல்லி: நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடருக்கு பின்னர் மத்திய அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சராக இருந்த வெங்கய்ய நாயுடு, துணை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகிறார். இதனையடுத்து, அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
அவரிடம் இருந்த தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறையை ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணியிடம் கூடுதலாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அதே போன்று ஊரக வளர்ச்சித் துறை நரேந்திர சிங் தோமருக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, கோவா மாநிலத்தில் முதல்வராக மனோகர் பாரிக்கர் பொறுப்பேற்ற போது, அவரிடம் இருந்த பாதுகாப்புத் துறை, நிதி அமைச்சர் அருண் ஜேட்லியிடம் கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. அதே போன்று மத்திய சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்த அனில் மாதவ் தவே மே மாதம் காலமானதையடுத்து, அந்தத் துறையையும் அருண் ஜேட்லியே கவனித்து வருகிறார்.
இந்நிலையில், விரைவில் மத்திய அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் முடிவடைந்த உடன் அமைச்சரவை மாற்றத்தை எதிர்ப்பார்க்கலாம் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.