வெள்ள சேதத்தை ஆய்வு செய்ய மத்திய குழு நாளை மறுநாள் தமிழகம் வருகை !
டெல்லி: தமிழகத்தில் மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளை மத்திய குழு நாளை மறுநாள் ஆய்வு செய்கிறது. ஆய்வுக்குப் பின்னர் அடுத்தகட்ட நிதி ஒதுக்கப்படும் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. வரலாறு காணாத அளவில் பெய்த கனமழையின் தாக்கத்தில் இருந்து இன்னும் சென்னை மாநகரம் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. பெரும்பாலன பகுதிகளில் வெள்ள நீர் வடியாததால் பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்திற்கு கடலூர் மாவட்டம் பெருமளவு பாதிக்கப்பட்டது. இதையடுத்து வெள்ள நிவாரண உதவியாக தமிழக அரசு ரூ.500 கோடியை ஒதுக்கியது.
பின்னர் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளச்சேதங்கள் குறித்து பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். அதில் தமிழகத்துக்கு உடனடி நிவாரணமாக ரூ.2000 கோடி தேவை என குறிப்பிட்டு இருந்தார். இதற்கிடையே தமிழக வெள்ள நிவாரணத்துக்கு முதல்கட்டமாக ரூ. 940 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பிரதமர் மோடி அறிவித்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்ய மத்திய குழு நாளை மறுநாள் தமிழகம் வருகிறது. இந்தக் குழுவில் மத்திய உள்துறை இணைச் செயலாளர் டி.வி.எஸ்.என். பிரசாத் தலைமையில் நிதி அமைச்சகம், உள்துறை மற்றும் விவசாயத்துறையைச் சேர்ந்த 9 அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அறிக்கை அளிப்பார்கள் அதன் பின்னர் இந்த குழுவின் ஆய்வின் அடிப்படையில் அடுத்தகட்ட நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.