சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி, நெல்லை, தூத்துக்குடி.. இதுவரை தமிழகத்திற்கு 6 ஸ்மார்ட் சிட்டி
மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் தமிழகத்திற்கு 6 ஸ்டார்ட் சிட்டிகள் கிடைத்துள்ளன.
டெல்லி: மத்தியில் ஆளும் பாஜக அரசின் கனவுத் திட்டங்களில் ஒன்றான ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தமிழகத்தில் இருந்து இதுவரை 6 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு 3ம் கட்டமாக, 30 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் இருந்து திருச்சி, திருப்பூர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் ஸ்மார்ட் சிட்டி தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அதன் படி முதல் கட்ட அறிவிப்பில் சென்னை மற்றும் கோவை ஆகிய 2 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.
2016ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தமிழகத்தில் இருந்து எந்த நகரமும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
இந்நிலையில், 3ம் கட்டமாக இன்று 30 நகரங்கள் கொண்ட பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் திருச்சி, திருப்பூர், நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் 98 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டிக்களாக மாற்றப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அது வெளியிட்டுள்ள பட்டியலில் தமிழகத்தில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு, நெல்லை, தூத்துக்குடி, திண்டுக்கல், திருப்பூர், வேலுர், தஞ்சாவூர் ஆகிய நகரங்கள் இடம் பெற்றிருந்தன.
அந்த பட்டியலில் இருந்து, சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 6 நகரங்கள் இதுவரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.