டெல்லி அரசின் ஜன்லோக்பால் உள்பட 14 மசோதாக்களை திருப்பி அனுப்பியது மத்திய அரசு !
டெல்லி: சரியான வழிமுறைகளை பின்பற்றப்படவில்லை எனக் கூறி டெல்லி அரசு அனுப்பிய 14 மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சகம் திருப்பி அனுப்பியது அனுப்பியுள்ளது.
டெல்லி அரசுக்கும் மத்திய அரசுக்கும் பல்வேறு விவகாரங்களில் அடிக்கடி மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில், டெல்லி அரசு அனுப்பிய 14 மசோதாக்களை சரியான வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை என கூறி மத்திய உள்துறை அமைச்சகம் திருப்பி அனுப்பியுள்ளது.
இந்த மசோதாக்கள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் முன் சரிபார்க்கப்பட்டு இருக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் கனவு மசோதாவான ஊழலுக்கு எதிரான ஜன்லோக்பால் மசோதாவும் திருப்பி அனுப்பட்ட 14 மசோதாக்களில் ஒன்றாகும்.
இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது டுவிட்டரில், வழிமுறைகள் பின்பற்றப்பட்ட பிறகு 10 முறை நாங்கள் மசோதாக்களை அனுப்பினோம். மசோதாக்களை நிறைவேற்றும் திட்டம் அவர்களுக்கு இல்லை. அனைத்து வழியிலும் அவர்கள் குறுக்கிடுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததில் இருந்து இதுவரை ஒரு மசோதாவை கூட ஆம் ஆத்மி அரசால் நிறைவேற்றப்படவில்லை. மத்திய அரசு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் வரையில் புதிய மசோதா தாக்கல் செய்யப்போவது இல்லை என்று அண்மையில் ஆம் ஆத்மி தெரிவித்து இருந்தது கவனிக்கத்தக்கது.