ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மசோத நிறைவேற்றப்படும்: ஜவடேகர் உறுதி !
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த புதிய மசோதா நிறைவேற்றப்படும் என மத்திய மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில் ஒன்றானது ஜல்லிக்கட்டு, தென் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் பொங்கல் மற்றும் கோயில் திருவிழாக்களில் இந்த வீர விளையாட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக குற்றம்சாட்டி விலங்குகள் நலவாரியம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து இந்த போட்டிகளை நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
இதையடுத்து தற்காலிக அனுமதி வழங்கப்பட்டு பல்வேறு கட்டுபாடுகளுடன் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து தடையை அகற்ற வேண்டும் என தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், விலங்குகளை துன்புறுத்தாமல் ஜல்லிக்கட்டு போன்ற பாரம்பரியமிக்க கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்த மத்திய அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்று கூறினார்.
நாளை தொடங்கும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் சுமூகமாக நடக்கும் பட்சத்தில் ஜல்லிக்கட்டு குறித்த புதிய மசோதா நிறைவேற்றப்படும் என்று பிரகாஷ் ஜவடேகர் உறுதி அளித்தார்.
தொடர் மழையால் சென்னை மாநகரம் தண்ணீரில் தத்தளித்தது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, இது நாம் விழித்தெழ வேண்டிய நேரம் நீர்வழித் தடங்களையும், நீர்வடிகால்வாய்களையும் முறையாகப் பராமரித்தால் இதுபோன்ற நிலை ஏற்படாது என்று பிரகாஷ் ஜவடேகர் குறிப்பிட்டார்.