நாடு முழுவதும் புதிதாக 50 சோலார் பூங்கா: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இந்தியா முழுவதும் கூடுதலாக 50 சோலார் பூங்காக்களை அமைப்பதற்கான ஒப்புதலை இன்று மத்திய அமைச்சரவை அளித்துள்ளது.
டெல்லி: மின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக இந்தியா முழுவதும் கூடுதலாக 50 சோலார் பூங்காக்களை அமைப்பதற்கான அனுமதியை இன்று மத்திய அரசு வழங்கியது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை இன்று கூடியது. அதில், நாடு முழுவதும் கூடுதலாக 50 சோலார் பூங்காக்கள் அமைக்க மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
சோலார் மின்உற்பத்தி கொள்ளளவை 20 ஆயிரம் மெகா வாட்டில் இருந்து 40 ஆயிரம் மெகா வாட்-ஆக உயர்த்துவதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சோலார் பூங்காக்கள் மற்றும் அல்ட்ரா மெகா சோலார் மின் திட்டங்கள் ரூ.8,100 கோடி நிதி ஒதுக்கீட்டில் 2019-20 ஆம் ஆண்டுகளில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நேபாள நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் அருண் நதி-3 நீர் மின் திட்டத்தில் முதலீடு செய்வது தொடர்பான பரிந்துரைக்கும் பொருளாதார விவகாரங்களுக்கான இந்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.