ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க கூடாது... மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
டெல்லி: பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கான தடையை நீக்கவேண்டும் என்று தமிழகர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க விரைவில் கொள்கை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறி, ஜல்லிக்கட்டு ஆர்வலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
உலக ஆய்வக விலங்குகள் தினத்தை முன்னிட்டு டெல்லியில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விலங்குகள் நலன் சார்ந்த இணையதள சேவையை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மக்களின் மதம், கலாச்சாரம் சார்ந்த ஜல்லிக்கட்டு போன்ற போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்றார். இது போன்ற போட்டிகளுக்கு தடை விதிப்பதால் பாரம்பரிய கலாச்சார மாண்பு சீர்குலையும் அபாயம் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க விரைவில் கொள்கை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அவர்,
இது போன்ற விழாக்களில் விலங்குளின் நலன்களுக்கு எதிரான செயல்கள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் மத்திய அமைச்சர் தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது ஜல்லிக்கட்டு ஆர்வலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.