தேசிய ஆன்லைன் விவசாய சந்தைக்கு ரூ200 கோடி ஒதுக்கீடு- மத்திய அரசு
டெல்லி: தேசிய ஆன்லைன் விவசாய சந்தைகக்காக ரூ200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர்கள் குழு டெல்லியில் நேற்று முன்தினம் கூடியது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நேற்று கூறியதாவது:
நாட்டில் உள்ள விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி அளிப்பதற்கான பிரதான் மந்திரி கிரிஷி சின்சாய் யோஜனா திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் மத்திய பட்ஜெட்டில் ரூ.50 ஆயிரம் கோடி செலவிடப்படும். மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் இதை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
நடப்பு நிதி ஆண்டில் ரூ.5 ஆயிரத்து 300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தேசிய ஆன்லைன் விவசாய சந்தை ஒன்று உருவாக்கப்படும். இதற்காக 3 ஆண்டுகளுக்கு ரூ.200 கோடியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த ஆன்லைன் விவசாய சந்தை, நாடு முழுவதும் உள்ள 585 மொத்த விற்பனை சந்தைகளை ஒருங்கிணைக்கும்.
ஒட்டுமொத்த மாநிலத்துக்கு ஒரு உரிமம், ஒரு முனைவரி அமல்படுத்தப்படும். விலை நிர்ணயத்துக்காக மின்னணு வழி ஏலம் நடைபெறும். இதன் விளைவாக ஒரு மாநிலமே சந்தை ஆகும்.
இவ்வாறு அருண் ஜேட்லி கூறினார்.