சீக்கியர்கள் படுகொலை உண்மைகளை தோண்ட சிறப்பு குழு! அச்சத்தில் காங்கிரஸ் புள்ளிகள்
டெல்லி: இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை கண்டறியவும், அவர்களுக்கு நீதி வழங்கவும் சிறப்பு புலனாய்வு குழுவை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கலக்கத்தில் உள்ளனர்.
1984ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி, தனது பாதுகாவலரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அந்த பாதுகாவலர் சீக்கியர் என்பதால் காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் சீக்கியர்களை குறிவைத்து கொன்று குவிக்க தொடங்கினர். டெல்லி, பஞ்சாப்பில் ரத்த ஆறு ஓடியது.
இந்த சீக்கியர்களுக்கு எதிரான இந்த இனப்படுகொலை குறித்து போலீசாரிடம் அளிக்கப்பட்ட புகார்கள், ஆதாரங்கள் அப்போதைய காங்கிரஸ் அரசால் மூடப்பட்டதாக குற்றச்சாட்டு நீடித்து வருகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட சீக்கியர்களுக்கு நியாயம் பெற்றுத்தரப்படும், இனப்படுகொலையில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சமீபத்தில் அறிவித்தார்.
தற்போது டெல்லி சட்டசபை தேர்தல் ஆயத்தத்தில் மத்திய அரசு இயந்திரம் முழுமையாக பயன்படுத்தப்பட்டுவருகிறது. எனவே தேர்தல் முடிந்ததும், சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து விசாரிக்க சிறப்பு குழுவை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் பல காங்கிரஸ் தலைவர்கள் கலக்கத்தில் உள்ளனர். இந்த சிறப்பு குழு, கலவரம் தொடர்பான ஆதாரங்களையும், அதன்பின்னணியில் இருந்தவர்கள் குறித்தும் விசாரிக்க உள்ளது. இருப்பினும் இக்குழுவில் யார் யார் இடம்பெறுவார்கள் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.