நிலக்கரி சுரங்க விவகாரம்: அவசர சட்டம் கொண்டுவர மத்திய அரசு முடிவு
டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் சில நிலக்கரி சுரங்கங்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து, இது தொடர்பாக அவசர சட்டம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் , கடந்த 1993 முதல் பல்வேறு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 214 நிலக்கரி சுரங்கங்களுக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து கடந்த மாதம் உத்தரவிட்டது. அதே சமயத்தில் 42 நிலக்கரி சுரங்கங்களை இயக்கவும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது.
இந்நிலையில் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக அவசர சட்டம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.
மேலும், இது குறித்து அப்போது அவர் கூறியதாவது:
" நிலக்கரி சுரங்கங்களுக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டதால், மின்சாரம், இரும்பு, மற்றும் சிமென்ட் தொழிற்சாலைகள் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக அவசர சட்டம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அமைச்சரவை இதற்கான பரிந்துரையை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளது.
புதிய ஒதுக்கீடுகள் அனைத்தும் எந்தவித ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக நடைபெறும். சுரங்கம் ஒதுக்கீடு செய்யும் பணி இன்னும் 3 அல்லது 4 மாதங்களில் நிறைவடையும். நிலக்கரி சுரங்கங்கள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு வழங்கப்படும் . எதிர்காலத்தில் சிமென்ட் மற்றும் ஸ்டீல் தொழிற்சாலைகளுக்கு போதிய நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கப்படும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.