போபர்ஸ் ஊழலைப் போல ராஜீவ் காந்தி கொலை வழக்கும் மீண்டும் விசாரிக்கப்படுகிறதா?
போபர்ஸ் ஊழலைப் போல ராஜீவ் காந்தி கொலை வழக்கும் மீண்டும் விசாரிக்கப்படலாமோ என்கிற கேள்வி எழுந்துள்ளது.
டெல்லி: காங்கிரஸுக்கு எதிரான போபர்ஸ் பீரங்கி பேர ஊழலைப் போல ராஜீவ் காந்தி கொலை வழக்கும் மீண்டும் விசாரிக்கப்படலாமோ என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது.
1980களின் மத்தியில் இந்தியாவை புரட்டிப் போட்டது போபர்ஸ் பீரங்கி பேர ஊழல். 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஊழல் வழக்கு விசாரணை நடைபெற்றது.
சுவீடனின் போபர்ஸ் பீரங்கிகள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்துக்கு அரசியல் தலைவர்களுக்கு ரூ.64 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டது என்பது வழக்கு. இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டுவிட்டது.
மீண்டும் விசாரணை
ஆனால் போபர்ஸ் பீரங்கிகள் வாங்கியது தொடர்பான 1989, 199ம்- ஆண்டு கணக்கு தணிக்கை அறிக்கைகள் நாடாளுமன்றத்தின் பொது கணக்கு குழுவில் நிலுவையில் இருக்கின்றன. இதை பொது கணக்கு குழுவின் துணைக் குழு ஆராய்ந்து மீண்டும் விசாரிக்க முடியுமா? என சிபிஐயிடம் கேட்டிருந்தது.
சிபிஐ தயார்
இதற்கு பதிலளித்த சிபிஐ, போபர்ஸ் பீரங்கி பேர ஊழலை மீண்டும் விசாரிக்க தயார் என பதில் அளித்திருக்கிறது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அர்ஜூன்சிங் கடிதம்
இந்நிலையில் 1999-ம் ஆண்டு உள்துறை அமைச்சராக இருந்த அத்வானிக்கு மறைந்த முதுபெரும் காங்கிரஸ் தலைவர் அர்ஜூன்சிங் எழுதிய கடிதம் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த சிபிஐ விசாரணை குழு மீது நம்பிக்கை இல்லை எனவும் ராஜீவ் காந்தியை படுகொலை செய்த பெல்ட் வெடிகுண்டு குறித்து விசாரிக்கப்பட வேண்டும் எனவும் அக்கடிதத்தில் அர்ஜூன்சிங் வலியுறுத்தியுள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
உச்சநீதிமன்றத்தில் ஓரிரு நாட்களில் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோரை விடுவிப்பது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற உள்ளது. இந்த நிலையில் அர்ஜூன்சிங்கின் கடிதம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
பெல்ட் வெடிகுண்டு
அதுவும் பெல்ட் வெடிகுண்டு தொடர்பாக விசாரித்தால் நாங்கள் குற்றமற்றவர்கள் என தெரிய வரும் என பேரறிவாளன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதை வலுப்படுத்தும் விதமாக அர்ஜூன்சிங் கடிதம் திடீரென வெளியாகி உள்ளதால் போபர்ஸ் பீரங்கி பேர ஊழலைப் போல ராஜீவ் கொலை வழக்கும் மீண்டும் விசாரிக்கப்படக் கூடுமோ என்கிற கேள்வி எழுந்துள்ளது.