தயாநிதி, கலாநிதி பாஸ்போர்ட்டுகளை மத்திய அரசு முடக்குமா? லோக்சபாவில் அ.தி.மு.க. எம்.பி. கேள்வி
டெல்லி: ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த விவகாரம், பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளை சட்டவிரோதமாக பயன்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கு ஆகியவற்றில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மத்திய தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறனின் பாஸ்போர்ட்டுகளை மத்திய அரசு முடக்குமா என்று லோக்சபாவில் அ.தி.மு.க. எம்.பி. கே.என். ராமச்சந்திரன் கேள்வி எழுப்பினார்.
லோக்சபாவில் நேற்று கேள்வி நேரத்தின் போது கே.என். ராமச்சந்திரன் பேசியதாவது:
முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், ஊழலுக்கு எல்லாம் தாய் போன்ற 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டால் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது, மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக தயாநிதி மாறன் இருந்த போது, அவரது இல்லத்தில் பிஎஸ்என்எல் தொலைபேசி சேவையின் 323 இணைப்புகளை சட்டவிரோதமாக வைத்திருந்தது, ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த விவகாரம் போன்றவை நடந்தன.
இவை எல்லாம் நாட்டின் நிதி நிலைமை சரிவடைய முக்கிய காரணமாகும். இதுபோன்ற ஊழல்களில் தொடர்புடைய பொருளாதாரக் குற்றவாளிகளின் சொத்துகளை ஜப்தி செய்து, அதை அரசுக் கருவூலத்தில் சேர்க்க முடியுமா?
சம்பந்தப்பட்டவர்களின் பாஸ்போர்ட்டை மத்திய அரசு முடக்கி வைக்குமா? என்பதை நிதியமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பதில் அளிக்கையில், இரண்டு வகைகளாகத் தொடர்புடைய கேள்விகளை உறுப்பினர் எழுப்பியுள்ளார். ஒன்று இயற்கை வளங்களுடன் தொடர்புடையது. அந்த வகையில் இயற்கை வளமான அலைக்கற்றையை அமைச்சருக்குரிய அதிகாரத்தின்படி ஒதுக்கீடு செய்யும் நடைமுறைகள் எல்லாம் தற்போது நீக்கப்பட்டுள்ளன. நுகர்வோர் நலன் கருதி, சிறந்த முறையில் அந்த வளங்களை ஒதுக்கீடு செய்யும் நடைமுறைகளுக்கான கொள்கைகள் தெளிவாக வகுக்கப்பட்டுள்ளன.
அதே நடைமுறையைக் கனிம வளங்கள், நிலக்கரி ஆகியவற்றுக்கும் மத்திய அரசு பின்பற்றி வருகிறது. இரண்டாவது வகை கேள்வி, சிபிஐ போன்ற அமைப்புகளால் விசாரிக்கப்பட வேண்டிய விவகாரம். அதில் நடவடிக்கை எடுப்பது அந்த துறையின் விருப்பம் என்றார்.
முன்னதாக இது தொடர்பாக ராமச்சந்திரன் பேசும் போது, தயாநிதி மாறனின் பெயரைக் குறிப்பிட்டு அவர் கேள்வி எழுப்பினார். ஆனால் சபையில் இல்லாதவர்களின் பெயர்களைக் குறிப்பிடக் கூடாது என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் குரல் எழுப்பினர். இதையடுத்து தயாநிதி மாறனின் பெயரை நீக்கி விட்டு கேள்வியை மட்டும் சபைக் குறிப்பில் பதிவு செய்து கொள்ள லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனுமதி அளித்தார்.
ஆனால் அதன் பிறகும் ராமச்சந்திரன் எழுப்பிய கேள்விக்கு நேரடியாக விளக்கம் அளிக்காமல், அரசின் கொள்கை முடிவுகள் தொடர்பாக மழுப்பலான பதிலாகவே அருண் ஜேட்லி பதிவு செய்தார்.