ஜல்லிக்கட்டு: உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை வாய் திறக்காதாம் மத்திய அரசு!
ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை மத்திய அரசு வாயை திறக்க கூடாது என முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. முதல்வர் ஓபிஎஸ் சந்தித்தாலும் இதே முடிவைத்தான் பிரதமர் மோடி தெரிவிக்க கூடும்.
டெல்லி: ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை வாய் திறக்காது என்றே டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த அனுமதி கோரி தமிழகமே கொந்தளித்து போர்க்கோலம் பூண்டுள்ளது. அலங்கநால்லூரில் தொடங்கிய இந்த போராட்டம் சென்னை மெரினா கடற்கரை, மதுரை தமுக்கம் மைதானம், கோவை வ.உ.சி மைதானம். பாளையங்கோட்டை மைதானம் என தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பல நாட்களாக தொடருகிறது.
கல்லூரி வகுப்புகளை புறக்கணித்துவிட்டு மாணவர்கள் லட்சக்கணக்கில் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இளைஞர்கள் தங்களது வேலைகளை தூக்கி எறிந்துவிட்டு வீதியில் உட்கார்ந்துள்ளனர்.
இதனையடுத்தே தற்போது பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி சென்றுள்ளார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். ஆனால் மத்திய அரசோ, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை காத்திருக்கலாம் என முடிவு செய்துள்ளதாம்.
தமிழகத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதை பற்றி கிஞ்சித்தும் கவலையே படவில்லை மத்திய அரசு. தற்போது மோடியை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்தாலும் கூட ஜல்லிக்கட்டு தொடர்பாக எந்த முடிவும் வெளிவராது என்றே கூறப்படுகிறது.